Wednesday, March 5, 2014

முடிவே……முடிவாகாது

உண்மை கதை.  எழுதியவர் தா. ராசாமணி

“மனம் தன்னுடைய நிலையில், அதுதானே நரகத்தை சொர்க்கமாகவும், சொர்க்கத்தை நரகமாகவும் உருவாக்க முடியும்”-மில்டன் 

மப்பும் மந்தாரமுள்ள இரவு. எங்கும் நிசப்தம், இடை இடையே மெல்லிய ஒளிக் கீற்றான மின்னல்கள். 

இரவு மணி ஒன்று என்று பெரிய சப்தத்தை எழுப்பி தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது மாதா கோவில் கடிகாரம். 

எனக்கு தூக்கம் அன்று ஏனோ வரவில்லை! நான் எவ்வளவோ முயற்சித்தாலும் தூக்கம் என் கண்களுக்கு வரவில்லை. 
பக்கத்து அறையின் என் மனைவியும் குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தனர்……

அந்த இரவின் மயான அமைதியை கலைப்பது போல் என் வீட்டின் தொலைபேசி ஒலித்தது. 

என்னருகில் தொலைபேசி இருந்ததால், நான் அதை என் காதில் வைத்து….. “ஹலோ…பேராசியர் சந்திரன்…”என்றேன். 

“சார் நான் உங்கள் பழைய மாணவி வசந்தி பேசுகிறேன்….” 

“வசந்தியா….யாரும்மா……!இப்பொழுது எங்கள் கல்லூரியில் படிக்கிறாயா…? 

“சார்….நான் 2008யில் நம்ம கல்லூரியில் பட்டபடிப்பு முடித்தேன் சார். உங்கள் மாணவி சார்…..கல்லூரியில் எல்லா போட்டிகளிலும் குறிப்பாக பரத நாட்டியத்தில் கலந்து பரிசுகள் பெற்றி இருக்கிறேன்……நான் அப்பொழுது என் குடும்ப சூழ்நிலைகளை உங்களிடம் சொல்லி இருக்கிறேன்…..நீங்கள் எனக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறீர்கள்……சார்”  

“ஆமாம்….ஆமாம்…..இப்பொழுது தான் ஞாபகம் வருது….பல்கலைத் தேர்வில் நீ தங்கப்பதக்கம் கூட பெற்றாயே….! 

“ஆமாம்…..சார்……நான்தான் சார்….. 

“இப்பொழுது என்ன காரியமா இரவு ஒரு மணிக்கு போன் செய்கிறய்…..?” 

“சார்…..என்னுடைய வாழ்க்கையின்….கடைசி மணித்துளிகளில் இருக்கிறேன்…. ஆமாம்…..சார்…..நான் தற்கொலைச் செய்துக் கொள்ள போகிறேன்.  அதற்கு முன் உங்களிடம்….என் கவலைகளை, வேதனைகளைச் சொல்ல வேண்டும் என நினைத்தேன்….சார்……தயவுசெய்து உங்களை தொந்தரவுபடுத்துவதற்கு மன்னியுங்கள்…..சார்…..எனக்கு அம்மா….அப்பா….அல்லது சகோதரிகள், சகோதரர்கள் எனக்கு யாரும் இல்லை…..அதனால் தான் நான் என் வாழ்வின் கடைசி முடிவில் உங்களிடம் பேச விரும்புகிறேன்…’. அவள் சற்று நிறுத்தினாள். அவள் அழுதுக் கொண்டிருக்கிறாள் என்பதை அவளுடைய விம்மலின் ஒலி மூலம் அறிந்துக் கொண்டேன். 

அவளுடைய கவலைத் தோய்ந்த பேச்சைக் கேட்டதும் நான் திடுக்கிட்டேன். 

வாழ்வின் முடிவில் ஒரு பெண்; அதுவும் என்னிடம் பேச விரும்புகிறாள்… எனக்கு ஒன்றும் ஒடவில்லை இதயம் படபடத்தது. வியர்வை உடம்பை நனைத்தது. 

வசந்தி ஒரு அருமையான, என் அன்புக்கு பாத்திரமான மாணவி… ஒழுக்கத்திலும் படிப்பிலும், பரத நாட்டியத்திலும் சிறந்து விளங்கியவள் அவள் கல்லூரியில் படிக்கும் பொழுது அவளுடைய அம்மா உயிரோடு இருந்தார்கள்.  கூலி வேலைகளைச் செய்து கொண்டே தான் மகளை படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்…….இன்று உயிரோடு இல்லை போலும்…..!  

“அம்மா…..வசந்தி…..அழாதே…..!ஏன் தற்கொலை?ஏன் இந்த அதிதீவிரமான முடிவுக்கு வந்திருக்கிறாய்…..?கவலைப்படாதே….!எல்லாம் சரியாய் போய்விடும்…..!”   

“இல்லை சார்…..என் நிலை இனி சரியாகாது…..இனி என் வாழ்க்கையில் எனக்கு எந்த பிடிப்பும் இல்லை…..
“ஆமாம்…..உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?”-அவளுடைய மனதை மாற்ற இந்த கேள்வியை கேட்டேன். 

“நான் கல்லூரி படிப்பை முடித்ததும், வேலைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது தான் இந்த மாப்பிள்ளையை என் அம்மா பார்த்தார்கள்.  எங்களைவிட பணக்காரர், அழகானவர், படிப்பு சுமார். என் அம்மாவுக்கு இந்த மாப்பிள்ளையை பிடித்துவிட்டது ரொக்கம் வேண்டாம் என்றார்கள். நான் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும், இப்பொழுது திருமணம் வேண்டாம் என என் அம்மாவிடம் கூறினேன், ஆனால் என் அம்மா இந்த திருமணத்திற்கு அவசரப்படுத்தினதால், நான் சம்மதித்தேன்” 

“திருமணம் செய்துக் கொள்ளுவது நல்லதுதானே அம்மா…..!அதைதான் உன் அம்மா உனக்கு செய்திருக்கிறார்கள்….”நான் சொன்னேன்.      

“நானும் அப்படி நினைத்து தான் திருமணத்திற்கு சம்மதித்தேன்.  ஆனால் திருமணம் ஆன சில மாதங்களுக்கு பின் தான் அந்த ஆள்- என் கணவரின் நடவடிக்கையை அறிந்தேன்.  சரியாக வேலைக்கு போவதில்லை, சரியான குடிகாரர், மேலும் பல பெண்களின் தொடர்பு…..”  

“அட…..அட….அவர் ஓழுக்கமான ஆள் இல்லை….அப்படிதானே…..?”-நான் கேட்டேன்.

“ஆமாம் சார்…..சில பெண்களை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருவார்…..நான் அவர்களுக்கு சமையல் செய்ய வேண்டும்…..என்னிடம் அன்பாக இருப்பதில்லை…. கடந்த ஆறு மாதமாக இந்த துயர நிகழ்ச்சி நடைப்பெற்றிருந்தது. 
“மேலும்……”-அவள் சற்று தன் பேச்சை நிறுத்தினாள்…..       

“மேலும்…..என்னம்மா……”-நான் கேட்டேன்.

“மேலும்…..நான் போட்டிருந்த என் நகைகளை எல்லாம் விற்று விட்டார்…. என்னை ஒரு அடிமைபோல் நடத்தினார். என்னால் தாங்க முடியாத நிகழ்ச்சி இந்த இரவு நடைபெற்றுள்ளது…..”

“அது என்னம்மா…..!”

அவரும்-அந்த விலைமாதுவும் ஒன்றாய் காமகளியாட்டதில் ஒன்றாய் இருப்பதை நான் பார்க்க வேண்டுமாம்…..அது அவருக்கு அதிக “கிக்” தருமாம்…நான் மறுத்தேன்…எனக்கு “அடி உதை…..”அவர்கள் பக்கத்து அறையில் இருக்கிறார்கள்… நான் என் வாழ்வை முடித்துக் கொள்ள ஒரு கயிற்றை எடுத்து பேனில் மாட்டிக் கொண்டேன்…அந்த நிலையிலிருக்கும் பொழுது தான் உங்கள் நினைப்பு வந்தது…என் கல்லூரி நாட்களில் மாணவ மாணவிகளுக்கு எவ்வளவு அறிவுரைக் கூறினீர்கள் மாணவர்களான எங்களை நேசித்தீர்கள்.  எனவே இந்த என் வாழ்க்கையின் முடிவில் உங்களோடு பேச விரும்பினேன்…..”

“அம்மா…ஒரு முடிவு எப்பொழுதும் நிரந்தர முடிவாகாது. தயவு செய்து…சற்று யோசித்துப்பார்…நீ உன் வாழ்வை முடித்துக் கொள்ளுவதால் உன் கணவனுக்கு தான் முழு சுதந்திரம் கிடைக்கும்…உனக்கு தான் உன் வாழ்வு நஷ்டமடையும்…எனவே தற்கொலை முயற்சியை உடனே நிறுத்து….”நான் பதட்டதோடு கூறினேன் “இல்லை சார்…..இனி நான் உயிரோடு இருந்து எந்த லாபமும் இல்லை….இந்த உலகத்தில் எனக்கு யாரும் இல்லை…..மரணம் ஒன்றுதான் என்னைப் போன்ற அனாதைகளுக்கு நல்லதொரு தீர்வு……!நிரந்தர தீர்வு…..”உங்களிடம் பேசியதால்…..மாணவர்களின் அன்புக்குறிய – குறிப்பாக எனக்கு அன்பான என் ஆசிரியரிடம் எல்லாம் கடைசியாக கூறிவிட்டேன்…..இனி என் நெஞ்சின் பாரத்தை இறக்கி வைத்த மகிழச்சியுடன் நான் தற்கொலைச் செய்துக் கொள்ளுகிறேன்…..இவ்வளவு நேரம் என் சோக கதையை பொறுமையாக கேட்டதற்கு நன்றி சார்…..குட்பை……”
வசந்தி போனை கீழே வைக்க முற்பட்டதை அறிந்து மிக அவசரமாக… “வசந்தி…..வசந்தி…..”என சத்தமாக கூப்பிட்டேன். இறப்பின் விளும்பில் இருக்கும் ஒரு பெண்ணின் கடைசி வார்த்தைகள் என்னை….என் உள்ளத்தை உடைத்துப் போட்டன…..! “என்ன சார்….”ஈனக்குரலில் வசந்தி பதிலளித்தாள்.

“வசந்தி…..இவ்வளவு நேரம் நீ பேசினாய்…..எனக்கு சற்று சில நிமிஷங்களைக் கொடு…..அதுதான் என் வேண்டுகோள்…..!வசந்தி…..நீ உன் பேராசிரியருக்கு கொடுக்கும் கடைசி மரியாதை இதுதான்…..போனை அவசரப்பட்டு வைத்துவிடாதே…..”நான் சற்று பதட்டதோடு பேசினேன்.               

“என் அன்பான பேராசிரியர்க்கு நான் கொடுக்கும் மரியாதை இது வென்றால்… நீங்கள் பேசுங்கள் சார்…..”வசந்தி. 

“வசந்தி…..வாழ்க்கை என்பது நாம் விரும்புவதை எல்லாம் அனுபவிப்போம்…. கிடைக்கும் என எண்ணக் கூடாது. வாழ்க்கை என்பதே பிரச்சனைகள் மத்தியில் வாழ்வது தான்…..மில்டன்…..என்ற கவிஞன் தன்னுடைய “பேரடைஸ் லாஸ்டு என்ற காப்பியத்தில் மிக அழகாக சொல்லுகிறார். “நம்முடைய உள்ளம் சரியான நிலையில் இருக்கும் பொழுது நாம் நரகத்தை சொர்க்கமாக மாற்றலாம். சொர்க்கத்தை நரகமாக மாற்றலாம்”. எல்லாம் நமது மனதைச்சார்ந்தது. கடலில் வாழும் மீன்கள் அழகாக குதித்து நீந்தி விளையாடும். அந்த மீன்களை பிடிக்க, மீனவர்களின் வலை வீச்சு, பெரிய மீன்கள் அந்த சிறிய மீன்களை பிடிக்க வாயைப்பிளத்துக் கொண்டு வரும்… ஆனால் அந்த சிறிய மீன்கள் மிக சாமத்தியாக தங்களுடைய விரோதிகளிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளுகின்றன, அவை அறிவுள்ள மீன்கள். சில மீன்கள் “ஐயோ….!எவ்வளவு ஜீவ போராட்டமா?” என எண்ணி….சில வினாடிகள் கவலையால் துவளும் பொழுது மனிதன் விரிக்கும் வலைக்கும், பெரிய மீன்களுக்கும் இரையாக்கின்றன.

ஒரு அறிஞன் சொல்கிறான் “நம்முடைய விரோதிகள் நம்முடைய நரம்புகளை முறுக்கேற்றுகிறார்கள்” என்கிறார். 

“மன்னிக்கனும் சார்….நான் என் கணவரிடம் எவ்வளவோ போராடியிருக்கிறேன்.  அழுது பார்த்தேன்; கெஞ்சிப்பார்த்தேன்; கோபப்பட்டு பார்த்தேன். ஒரு பலனும் இல்லை. சார்…..எனக்கு யாரும் துணை இல்லாததால்…என்னை அதிகமாக சித்திரவதைச் செய்கிறார். தவிர எந்த நல்ல மாற்றமும் அவரிடம் காணவில்லை சார்……     

“வசந்தி….உன்நிலை எனக்கு நன்கு புரியுதும்மா. உன் கணவர் ஒரு சைக்கோ போல் செயல்படுகிறார் என நினைக்கிறேன்.  இந்த நிலையில்தான் நீ தைரியமாக ஒரு முடிவு எடுக்கனும் வசந்தி…நீ ஏதாவது வேலைக்கு போனால், நிச்சயம் உன் நிலை உறுதிப்படும்…உள்ளுரில் நீ ஏதாவது வேலைப் பார்த்தாலும் உனக்கு நல்லது என எண்ணுகிறேன்”.  

“உள்ளுரில் நான் கஷ்டப்பட்டு வேலைத் தேடினேன். வேலையையும் பார்த்தேன். ஆனால் நான் எந்த வேலைக்கும் போக கூடாது…அவருக்கு சமையல் மட்டும் செய்தால் போதும் எனக் கூறி, நான் வேலைப் பார்த்த இடங்களில் எல்லாம் தகராறு செய்து என்னை வேலையிலிருந்து நிறுத்திவிட்டார்…சார். இனி நான் உள்ளுரில் வேலைப்பார்க்க முடியாது சார்…வசந்தி தன் கண்ணீரின் கதையை எடுத்து கூறினாள்.  

“வசந்தி…நான் ஒரு முக்கியமான ஆலோசனைத்தரவா…?”-நான் கேட்டேன்.

“சொல்லுங்க சார்……”     
“வசந்தி…..உன் கணவன் இருக்கும் நிலையில் நாம் எதுவும்…..செய்ய முடியாது…..நீ தான் ஒரு முடிவு எடுக்கணும்….அதாவது உன் நிலையை விளக்கி உன் கணவனுக்கு ஒரு கடிதம் எழுதிவை. பின் சென்னையில் என் நண்பர் ஏற்றுமதி இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் போனால் உனக்கு நிச்சயம் உனக்கு ஒரு வேலைத் தருவார். நான் உன்னைப்பற்றி அவருக்கு போன் பண்ணி, உனக்கு வேலைத்தர சொல்லுகிறேன்…..என்ன சொல்லுகிறாய்? 

“வாழ்க்கையின் முடிவில் இருக்கும் எனக்கு வேலைப் பார்க்க விருப்பமில்லை சார்…..” 

“வசந்தி….மாணவர்கள் பொது தேர்வில் வெற்றிப் பெறாவிட்டால் அடுத்து வரும் தனித் தேர்வில் எழுதி வெற்றிப் பெறுவதில்லையா…..?எனக்காக இந்த முயற்சியில் இறங்கு….வெற்றி உனக்கு நிச்சயம்……!”  

“சரி…..சார்….முயற்சிச் செய்கிறேன்”-

“என் நண்பரின் விலாசத்தை குறித்துக்கொள், உனக்கு சென்னைக்கு போக பணம் இருக்கிறதா…..?” 

“இருக்கிறது சார்….உங்கள் நண்பரின் விலாசத்தை சொல்லுங்கள் சார்… அதிகாலை ஐந்து மணிக்கு சென்னைக்கு ரயில் இருக்கிறது சார். அதில் போகிறேன்…” 

நான் என் நண்பரின் விலாசத்தைக் கொடுத்து, அவளை சமதானம் படுத்தினேன்.  அவள் காலையில் ரெயிலைப் பிடித்திருந்தால், மதியத்திற்குள் சென்னை சென்றிருக்கலாம்…ஆனால் இதுவரை வசந்தியிடமிருந்தோ…என் நண்பரிடமிருந்தோ எந்த செய்தியும் வரவில்லை. அவள் சென்னை சென்றாளா? அல்லது தற்கொலை செய்துக் கொண்டாளா…..?தெரியவில்லை….”என கூறிய நான் அந்த ரயில்வே நிலையத்திற்கு வெளியே இருந்த சிமெண்ட் பெஞ்சுகளில் அமர்ந்திருந்த என் வயோதிக நண்பர்களை கூர்ந்து பார்த்தேன். 

“பேராசிரியர் சந்திரன் சார் நீங்கள் சொன்ன செய்தி துப்பறியும் கதையில் வரும் நிகழ்ச்சிப் போல் இருக்கிறது சார்…..”என்றார் முன்னால் தபால் துறை அதிகாரி சுவர்ணமாணிக்கம்…

“பெரிய சஸ்பெண்டாக இருக்கு சார்…! வசந்தி இப்பொழுது உயிரோடு இருக்கிறாளா? இல்லையா? அதுதான் இப்பொழுதுள்ள கேள்வி” எழுத்தாளர் ஆறுமுகப்பொருமாள் சொன்னார்…

“பெண்கள் சமுதாயத்தில் எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது” என்றார் பேராசிரியர் காசிராஜன்…  

முதியோர்களின் உரையாடலை கலைப்பது போல் பேராசிரியரின் செல்போன் ரீங்காரமிட்டது….

முதியோர் அனைவரும் திகிலோடு பேராசிரியர் சந்திரனின் செல்போனின் உரையாடலை கவனிக்க தொடங்கினர். 

பேராசிரியர் செல்போனில் உள்ள ஸ்பீக்கரை “ஆன்” பண்ணிவிட்டு பேச ஆரம்பித்தார்… 

“சார்…நான் உங்கள் மாணவி வசந்தி பேசுகிறேன். 

“என்ன வசந்தி…உன்னுடைய போனுக்காக காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறேன்…இனி விஷயத்தைக் சொல்லு…”     

“சார்…நீங்கள் சொன்னது போல் சென்னையில் உங்கள் நண்பரைப் பார்த்தேன். 

“அவருடைய கம்பெனியில் எழுத்தர் பணியை கொடுத்திருக்கிறார். மேலும் அவர் நடத்துகிற மன வளர்ச்சிகுன்றிய குழந்தைகளில் காப்பாகத்தில் எனக்கு தங்க இடம் அளித்திருக்கிறார். சார் இதுவரை வாழ்க்கையில் நான் தான் அதிகம் துன்பபடுகிறேன் என நம்பினேன். ஆனால் இந்த மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை பார்க்கும் பொழுது நான் எவ்வளவோ பாக்கியசாலி…..ஆசீர்வதிக்கப்பட்டவள் சார்….மேலும் இந்த காப்பகத்தில் சனிகிழமை….ஞாயிற்று கிழமைகளில் நடனம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.  அந்த நடன வகுப்பில் என்னையும் ஆசிரியராக என்னை பணியாற்ற சொல்லியிருக்கிறார்…..”   

“அது சரி….இனி உன் குடும்ப வாழ்க்கை….. 

“சார் நான் பாரதி கண்ட புதுமை பெண். இனி எனக்கு இருந்த குடிகாரன் பெண் பித்தனோடு இருந்த மனைவி என்ற பந்தம் அறுந்து விட்டது சார்…நீங்கள் சொன்னது போல் ஒரு முடிவே முடிவல்ல, ஒரு முடிவு….இன்னொரு வாழ்க்கையின் ஆரம்பம் என்பதை கண்டுக் கொண்டேன். இந்த குழந்தைகள்…. மனவளர்ச்சி குன்றிய இந்த குழந்தைகள் தான் என் குழந்தைகள்…இந்த அருமையானபுதிய வாழ்வை அமைத்துக் கொடுத்த உங்களுக்கு என் இதய பூர்ணமான நன்றி சார்…..”  

“இறைவன் உன்னை என்றும் ஆசீர்வதிப்பார் என் மகளே….”என கூறிய பேராசிரியர் தன்போனை ஆப் செய்தார்.  

“மிக்க மகழ்ச்சி…சார்…ஒரு பெண்ணுக்கு புதுவாழ்வை ஏற்படுத்திய உங்களுக்கு எங்கள் நன்றி சார்”-என தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் அந்த முதியவர்கள். 

ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியரான எனது நண்பர் திரு  தா. ராசாமணி அவர்களுக்கு தமிழ்ச்சிறுகதைகள் எழுதுவதில் அலாதிப்பிரியம்.புதியத்தென்றல் என்ற இதழில் வெளிவந்த இந்தக்கதையே நட்புக்காக எனது தளத்தில் வெளியிடுகிறேன்.


Sunday, June 2, 2013

ஆழி மழையும் அம்மாவின் மிக்ஸியும்




“அழிமழைக்கண்ணா ஒன்றும் நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்தேறி
ஊழி முதல்வனுருவம் போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
அழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலொரெம்பாவாய்”

இது திருப்பாவை என்னும் நூலில் உள்ள பழைய தமிழ்ப்பாடலாகும்.  இந்தப் பாடலில் கடலிருந்து நீர் முகரப்பட்டு மேலே சென்று மேகமாய் மாறி மழையாய் பொழிகின்றது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.  இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கடலிலிருந்து நீர் ஆவியாகி மேகமாய் மாறி மழையாய் பொழிவதை நவீன அறிவியல் உலகம் அறிந்து கொள்வதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் அறிந்து வைத்துள்ளான் என்று புரிகின்றது.  இலக்கியத்தில் மட்டுமல்ல விஞ்ஞானத்திலும் தமிழன் சிறந்து விளங்கினான்……..

மீண்டும்  மீண்டும் மனப்பாடம் செய்து கொண்டிருந்த தங்கம் இடையிடையே தன் தாய் பேச்சியம்மாளின் முகத்தை கவனித்துக் கொண்டாள்.

பேச்சியம்மாள். மெலிந்த தேகத்தில் முப்பது வயதக்குரிய இளமையின் வனப்புகள் ஏதுமில்லை.  இரண்டு தேங்காய்த் துண்டுகள் இரண்டு வற்றல் கொஞ்சம் உப்பு சேர்த்து அம்மியில் வைத்து நசுக்கிக் கொண்டிருந்தாள்.  மதிய உணவுக்கு துவையலும் ரசமும் தான்.

“அம்மா” மெதுவாக ஆரம்பித்தார் தங்கம் “என்னடி?”  

“திங்கட்கிழமைக்குள்ள எப்படியாவது வாங்கித் தந்துருவியா?”

“இவ ஒரு புளுபுளுத்தா! நாலு நாளா என் ஆவிய போட்டு எடுத்துக்கிட்டே இருக்கா! நாந்தான் வாங்கித்தாரேன்னு சொல்லிட்டன்லா? பேசாம இரியேன்”

“அது இல்லம்மா திங்கக்கிழமை சாநய்திரம் எங்க ஸ்கூல்ல ஆண்டு விழா.  ஆதில நா மேடையேறி பேசப் போறேன் அதுக்காவது போட்டு போவணும்னு ஆசயா இருக்கும்மா”

“இங்க பாரு முத்தய்யா அண்ணாச்சி சாயத்திரம் ரூபாய் கொண்டு வாரேன்னுருக்காரு நாளக்கி காலயில மொத வேலயா கொலுசுக்கடக்கி போயி வாங்கித்தந்துருதேன்”

“அம்மா நாளக்கி ஞாயிற்றுக்கிழமை நம்ம ஊரு கொலுசுக்கட லீவு. அவுங்க வேதம்லா?”

“நம்ம ஊருல இல்லன்னா என்ன? ஏரலுக்கு போயி வாங்கித் தாரேன்”.

“சரிம்மா” சந்தோசமாக கூறிவிட்டு விளையாட வெளியே சென்றாள் தங்கம்.  பேச்சியம்மாளுக்கு ஆற்றாமையால் நெஞ்சு முட்டிக் கொண்டு வந்தது.  சின்னபிள்ளை அதுக்கு என்ன தெரியும் பாவம் கூட படிக்கிற புள்ளைங்கல்லாம் கம்மல்ää கொலுசு போட்டு அழவு காமிக்கும் போது இவளுக்கும் ஆசை வரத்தானே செய்யும். ஆவ அப்பன் கோபாலு ஒரு குடிகாரப்பய அவன் ஒரு நாள் வேலபாத்துட்டு வந்தா ஒம்பது நாள் குடிச்சிட்டு கெடப்பான்.  அவனால ஒரு பிரயோசனுமும் இல்ல நான்தான் நாலு எடத்துல வேலபார்த்து கதய ஓட்டுதேன். நானும் நாளு மாசமா ஒரு கொலுசு வாங்கி குடுத்திரனும்னு நெனச்சிட்டுதானிருக்கேன்! முயடியல! ஓவ்வொரு செலவா வந்திருது.  சித்திர மாசம் கோயில் கொட.  அதுக்கு ஒரு பாடு செலவு.  வைகாசியில அண்ண மகா உக்காந்துட்டா! அதுக்கு சீரு செனத்தியின்னு ஏகமா ஆச்சுää போன மாசம் புருசனுக்கு உடம்பு சரியில்லாம போச்சுää அது குடியால வந்த கொழுத்துப் போன செலவு. ஓவ்வொண்ணுக்கும் சிட்ட வாங்கித்தான் சமாளிக்கேன். மேலத்தெரு பாலு அண்ணாச்சிதான் தருவாரு. இரண்டாயிரத்துக்கு நானூறு புடிச்சிக்கிட்டு ஆயிரத்து அருநூறு வாங்கினா நூறு நாள் இருபது ரூபாய் கட்டணும்.  இப்பவே மூணு சிட்ட ஓடுது.  இந்த நெலமயில கொலுசு வாங்க பணத்துக்கு எங்க போவேன் வேற வழயில்லாமத்தான் முத்தையா அண்ணாச்சி சொன்ன யோசனய கேட்டேன்.  தனக்குள் புலம்பியபடியே சோறு வடித்து இறக்கினாள்.  அரசு அறிவித்த இலவச பொருட்களான மிக்ஸியும்ää பேனும் சென்ற வாரம் தான் அந்த தெருவில் விநியோகிக்கப்பட்டது.  பேச்சியம்மாளுக்கும் கிடைத்தது.  அதை பயன்படுத்தாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருந்தாள்.  நான்கு நாள் முன்பு சாத்தான்குளத்திலிருந்து அவளுடைய பெரியப்பா மகன் முத்தையா அவள் வீட்டிற்கு வந்த போது.

“மிக்ஸியும் ஃபேனும் சும்மாவா கெடக்கு வேணும்னா வெலக்கி குருத்துருவமா?” என்று கேட்டார்.  

“ஏன் அண்ணாச்சி அரசாங்கம் இலவலசமாக குடத்த இதயுமா வெலக்கி விக்காக?

“என்னம்மா நீ  பேசுத?

“போன தடவ இலவச டி.வி பட்டபாடு ஓனக்கு தெரியாதாங்கும்! அதே நெலமதான் இதுக்கும்! யோசிச்சு சொல்லு! ரெண்டும் சேத்து ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு போவும்.  நானே வித்து தாரேன்”      

பேச்சியம்மாளும் யோசித்து பார்த்தாள் ஏற்கனவே ஃபேன் வீட்டில் இருக்கிறது.  மிக்ஸிய ப்ளக்கில் மாட்டி அரைப்பதற்குள்ää அம்மியில் வைத்து ரெண்டு இழுப்பு இழுத்து விடலாம்.  இந்த ஆயிரத்து ஐநூறு கிடைத்தால் மகளுக்கு கொலுசு வாங்கி கொடுத்து விடலாம்.

“சரி அண்ணாச்சி நீங்களே வித்துக்குடுங்க” என்றாள். உடனே இரண்டு பொருட்களையும் எடுத்துக் கொண்டு சனிக்கிழமை பணத்துடன் வருவதாக சென்றான் முத்தையா.

மாலை வேளை முத்தையா பணத்தை கொண்டு தந்தார்.  அதை வாங்கி வைத்த பின்புதான் அப்பாடா கொலுசு பிரச்சினை தீர்ந்தது என்று நிம்மதி அடைந்தாள்.

மறுநாள் காலை விறுவிறுவென்று வேலைகளை முடித்தாள்.  பத்தரை மணி ஏரல் செல்லும் பஸ்சை பிடித்தால் கொலுசு வாங்கிவிட்டு மதியம் திரும்பிவிடலாம் என்று வேகமாகக் கிளம்பினாள்.
பணத்தை எடுக்க பணம் வைத்திருந்த டப்பாவிற்குள் கைவிட்டபோது பகீரென்றது.  டப்பா வெறுமையாயிருந்து.

“அடப்பாவி மனுசா புள்ளாக்கி கொலுசு வாங்க வெச்சிருந்த பணத்தையா எடுத்த? ஆத்திரம் பொங்கியது.  துக்கம் தொண்டையை அடைத்தது.  நேற்று இரவு கோபால் முழுபோதையுடன் வந்துபோது கூட சந்தேப்படவில்லை. மிகஸியையும் ஃபேனையும் விற்று கொலுசு வாங்க பணம் வைத்திருப்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும் மகள் விசயத்தில் விளையாட மாட்டான் என்று நினைத்தாள்.  மகள் ஆசையோடு இருப்பாளே! அவளிடம் என்ன பதில் சொல்வது கொலுசு கிடைக்காது என்று தெரிந்தால் தாங்கமாட்டாளே.  

மனதில் துயரம் பொங்க அழுது அரற்றினாள்.

சிறிது நேரத்தில் போதையுடன் வீட்டிற்கு வந்தான் கோபால்

ஆவேசத்துடன் பாய்ந்து சட்டையை பிடித்து உலுக்கினாள்.

“நீயெல்லாம் ஒரு மனுசனா?” “பெத்த புள்ளக்கி ஒரு கொலுசு வாங்கித்தர வக்கில்ல. நான் கஷ்டப்பட்டு கொஞ்சம் பணம் ரெடி பண்ணி வெச்சிருக்கேன். அத எடுத்துட்டு போயி குடிச்சிட்டு வந்திருக்கியே நீயெல்லாம் வெளங்குவியா?”

“ஏ செத்த மூதி கைய எடுடி”

மனைவியின் கையை உதறினான்.

“ஏன் இந்த நெல நிக்க? என்னமோ கஷ்டப்பட்டு ஒழச்சு சேத்து வச்சிருந்த பணத்த எடுத்த மாதிரி இந்த குதி குதிக்க? இந்த பணம் எப்படி வந்தது சொல்லுடி”

“இலவச மிக்ஸிää ஃபேன் வித்து வாங்கி வெச்சிருக்கேன்”

“அப்படிச் சொல்லு! இலவச மிகஸியும்ää ஃபேனும் அரசாங்கம் குடுக்குதே! அதுக்கு பணம் எப்படி வருது? நோட்டு அச்சடிச்சா?”

“பொறவு?”

“அடிப்போடி கூறுகெட்டவளே.  நாங்க எல்லாம் கஷ்டப்பட்டு குடிக்கிறதால வர்ற வருமானத்த வெச்சு தாண்டிää அரசாங்கம் இலவசங்கள தருது.  கடல்லேருந்து ஆவியாவற தண்ணி மேகமா மாறி நெலத்துல பெய்யுது.  அது ஆறா ஓடி வருது.  அரசாங்கம் கடல் மாதிரி நாங்கல்லாம் ஆறு மாதிரி.  அந்த கடலுக்கே தண்ணியை குடுக்கறதே நாங்க தான்! இது புரியாம கத்தறே போவியா?        

தத்துவத்தை உதிர்ந்துவிட்டு கட்டிலில் சாய்ந்தான் கோபால்.

அடுத்த வீட்டில் தன் தோழியிடம் தான் மனப்பாடம் செய்த கட்டுரைய ஒப்பித்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள் தங்கம்.

ஆழி மழைக்கண்ணா ஒன்றும் நீ கைகரவேல்………..




Tuesday, May 28, 2013

டோமியோ


கி.மு. 3,000 டைகிரிஸ் நதி, ‘மெசபட்’ என்று அழைக்கப்படும் அந்த பகுதியை தனது  வளமான வண்டலால் செழிப்பாக்கிக் கொண்டு சலசலத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. நாரைகளும், கொக்குகளும் மீன் வேட்டையாடிபடி பொழுது போக்கிக் கொண்டிருந்தன.

Saturday, April 13, 2013

சி.சி.டி.வி மாட்டிட்டீங்களா?”

“எல்லாரும் வந்தாச்சா ஆரம்பிக்கலாமா?” கேட்டவாறே கம்பீரமாக அமர்ந்தார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். 

“ஆமா சார் ஆரம்பிச்சுடலாம்” என்றவாறே மைக்கை சரிசெய்தார் உதவியாளர். 

அது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மீட்டிங்ஹால்.
மாவட்டத்திலுள்ள நகைக்கடை செல்போன்கடை அடகுக்கடை நிதிநிறுவனங்கள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் அனைவரும் குழுமியிருந்தனர். 

“எல்லோருக்கும் வணக்கம்.  இப்போ எதுக்கு நீங்க எல்லோரும் அழைக்கப்பட்டிருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியும் ஏற்கனவே உங்க பகுதி லோக்கல் ஸ்டேசன்ல மீட்டிங் வச்சு விளக்கம் சொல்லியிருப்பாங்க மீண்டும் ஏன் இந்த மீட்டிங் அப்படின்னா எல்லாம் உங்க நலனுக்காதத்தான். 

தமிழ்நாடு முழுவதும் நிறய கொள்ளைச் சம்பவங்கள் நடந்திட்டிருக்கு இருக்கிற கொஞ்சம் போலிஸ் போர்ச வச்சு எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாது.  அதனால் எல்லா கடையிலேயும் அலாரம் சி.சி.டிவி போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கன்ன்னு வற்புறுத்திட்டு வர்றோம் இன்னும் நெறய பேரு செய்யலன்னு தெரியும் எனவே எல்லாரும் சீக்கிரம் மாட்டுங்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுங்க.

கொஞ்சம் தண்ணீர் அருந்திக் கொண்டார்.

தொடர்ந்தார்.    
“சரி ஒவ்வொருத்தரா எழுந்து என்னன்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் கெஞ்சிருக்கீங்கன்னு சொல்லுங்க” 

ஒவ்வொருத்தராய் சொல்ல ஆரம்பித்தனர். நகைக்கடைக்காரர் சுந்தரம் எழுந்தார். 

“சார் நம்ம கடை சின்ன கடை மக்கள்கிட்டே பணபுழக்கம் வேற இல்ல.  வியாபாரமே இல்ல இப்ப போயி இதுக்கு செலவு பண்ண கஷ்டமாயிருக்கு சார்”

“சரி உங்க கடையில எங்வளவு சரக்கு இருக்கும்?” 

“அது வந்து” இழுத்தார்

“ஒரு கிலோ தங்கமாவது இருக்கும் இன்னிக்கு என்ன மதிப்பு ஆவுது.  ஒரு இருப்தாயிரம் செலவு பண்ணினா என்ன தப்பு? பிறகு திருட்டு போயிருச்சின்னா வாயில வயித்துல அடிச்சிப்பீங்க. 

வேணும்னா எங்க காவல்துறை செலவுல உங்களுக்கு கேமரா மாட்டித் தர்றோம்.  ஆனா இந்த சிசிடிவியை ஸ்பான்சர் செய்தது மாவட்ட காவல்துறைன்னு போர்டு வச்சுடுவோம்” என்றார்.

அனைவரும் சிரித்தனர்.

சுந்தரம் மூக்கறுபட்ட மனநிலையோடு அமர்ந்தார் இன்னனாருவர் எழுந்தார். 

“சார் ஒரு சந்தோம் கடய உடச்சு திருடவர்றவன் முதல் வேலையா கேமராவ ஆப் பண்ணிடுவான் பிறகு எப்படி கண்டுபிடிப்பீங்க?” 

“ஐயா இதிலதான் நீங்க காவல்துறையோட மூளைய புரிஞ்சுக்கணும்! ஒரு கடையில கொள்ளையடிக்கப் போறவன கண்டிப்பா அந்த கடைக்கு முன்கூட்டியே வந்து பொருள் வாங்குறமாதிரி நோட்டம் பாப்பான்.  ஆதனால பழய வீடியோ பதிவு போட்டு பாத்து கண்டுபிடிச்சிடுவோம். அது மட்டுமல்ல கூட்ட நெரிசல பயன்படுத்தி பகல்லேயே பொருளைத்திடுறவன கண்டுபிடிக்கலாம் உங்க கடை ஊழியர்களை கண்காணிக்கலாம் அதனால சிசிடிவி கண்டிப்பா மாட்டுங்க” 

அனைவரிடமும் கையெழுத்து பெற்றபின் கூட்டம் முடிந்தது. 

அந்த சிறுநகரத்தில் ஒரு சிறிய நகைக் கடையில் அமர்ந்தபடி புலம்பிக் கொண்டிருந்தார் சந்தரம் சமீபத்தில் தான் அவர் மகளுக்கு திருமணம் நடத்தியிருந்தார். அதற்கு வேறு நிறைய செலவு செய்திருந்தார். 

“ஏற்கனவே பெரிய கடைகள் எல்லாம் வந்து சிறுகடைகளுக்கெல்லாம் வியாபாரம் படுத்துடுச்சி இப்ப பாத்து இந்த போலீங்காரங்க வேற இதமாட்டு அத மாட்டுன்னு தொல்லை பண்றாங்க” தனக்குள் புலம்பியபடி இருந்தாலும் புதிதாய் மாட்டியிருந்த சிசிடிவியில் தன்னுடைய உருவத்தை தானே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.           
“வீடியோவில் என் தொப்பையே தெரியலியே வயிறு குறைஞ்சிடுச்சா என்ன?” 

கடைப்பையனிடம் வினவினார். 

“ஆங்… கொஞ்சம் பெரிய டி.வியில் பார்த்தா பெரிசாத் தெரியும் இவ்வளவு சின்ன பழய டி.வி. அதுவும் ப்ளாக் அன் நயிட் எங்கேயிருந்து தான் உங்களுக்கு கெடச்சுதோ?”

“டேய் ஒல்ட் இஸ் கோல்டுடா இந்த டிவிய பத்தி ஒனக்கு என்னடா தெரியும் இருபது வருசமா ஒடிகிட்டு இருக்கு இப்ப உள்ள புதுமாடல் ரெண்டு வருசம் கூட தாங்காதேடா? 

“ஆமா இதுக்கு ஒண்ணுட குறச்சல் இல்ல” தனக்குள் முனங்கினான் பையன்.  
முன்தினம்தான் சுந்தரம் தனது கடையில் சிசிடிவி மாட்டியிருந்தார். சிறிது நேரத்தில் ஒரு பெண் கடையில் நுழைந்தார்.  முப்பது வயது இருக்கும் நல்ல உயரம் நல்ல சிகப்பு மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள். 
நல்ல வியாபாரம் நடக்க போகிறது என்று எண்ணி மகிழ்ந்து “வாங்க மேடம் வாங்க உக்காருங்க தம்பி மேடத்துக்கு ஒரு கூல்ட்ரிங்ஸ் வாங்கிட்டு வா” 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நான் பொருள் வாங்க வரலே நான் க்யூ ப்ராஞ்ச் சி.ஐ.டி எஸ். ரஞ்சனி!”  

மனதிற்குள் திக்கென்று உணர்ந்தார் என்னரது விசாரணைன்னு புரியலியே  அதற்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது. 

வந்தவள் ஒரு பேப்பர் எடுத்தாள்.

நான் எஸ்பி ஆபிஸிலிருந்து வர்றேன் மாவட்டம் முழுவதும் எல்ல கடைகளிலிலேயும் சிசிடிவி மாட்டியிருக்கான்று பாத்து ரிப்போட் குடுக்க சொல்லியிருக்காங்க லோக்கல் இன்ஸ்பெக்டர்கிட்டே உங்க ஊரு லிஸ்ட்டெல்லாம் வாங்கிட்டு வர்றேன் 

“அப்படியா” நிம்மதி அடைந்தார். 

“உங்க கடையில சிசிடிவி மாட்டியிருக்கிங்களா?”     

“ஆமாம் மேடம்

“வேற அலாரம் மாட்டியிருக்கீங்களா?”
“இல்லே மேடம்”  

“சீக்கிரம் மாட்டிடுங்க சரியா” என்றபடி பெயர் முகவரி எல்லா எழுதி கையொப்பம் வாங்கிக் கொண்டாள்.  

சுந்தரமும் பவ்யமாய் போட்டுக் கொடுத்தார். 

“சார் இந்த ஊரில் இன்னும் பத்து கடைகள் போக வேண்டியிருக்கு வெயில் வேற பயங்கரமாயிருக்கு உங்ககிட்ட டூவீலர் ஏதும் இருக்கா?”

“வண்டி…என் பையன் வண்டிதான் எடுத்துட்டு வந்தேன் அது பெரிய பைக் இருநூறு சிசி வண்டி…” 

“நான் எல்லா பைக்கும் ஓட்டுவேன் நான் ட்ரெயினங்குல பைக் சாகசம் எல்லாம் பண்ணியருக்கேன்” 

“ஒஹா” என்றபடி சாவியைக் கொடுத்தார் அவள் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிய அழகு நன்றாகத் தான் இருந்தது. அன்று வியாபாரம் நன்றாக இருந்தது.  மதிய உணவுக்கு கிளம்ப மதியம் மூன்று மணி ஆகிவிட்டது. 

அப்போதுதான் கவனித்தார் பைக் வாங்கிச் சென்ற பெண் எஸ்.ஐ. இன்னும் வரவில்லை. 

“பத்து கடையில் ரிப்போர்ட் எழுதிகிட்டு வர இவ்வளவு நேரமா?”

நீரிழிவு என்னும் அரக்கன் வேறு வயிற்றை கிள்ளினனான். 

“ஒருவேளை வேலை முடித்துவிட்டு ஸ்டேசனுக்கு போயிருப்பாங்களோ?” எண்ணியவாறே.

“டேய் தம்பி போலீஸ் ஸ்டேசன் நம்பர் சொல்லு இன்ஸ்பெக்டர் நமக்கு தெரிஞ்சவர்தாமே அவர்கிட்ட அங்கே வந்துருக்காங்களான்று கேப்போம்” என்றார்.     
நம்பர் பார்த்து போன் செய்தார். 

“ஹலோ போலீஸ் ஸ்டேசனா நான் சுந்தரம் நகைக்கடையிலிருந்து பேசறேன் இன்ஸ்பெக்டர் சார் இருக்காகரா? 

“ஆமா”
“கொஞ்சம் பேசணும் குடுங்களேன்!” 

இன்ஸ்பெக்டர் லைனில் வந்தார். 

“சொல்லுங்க அண்ணாச்சி” 

“சார் வணக்கம் க்யூப்ராஞ்ச் எஸ்.ஐ ரஞ்சனி மேடம் அங்க இருக்காங்களா?”

“க்யூ ப்ராஞ்ச் எஸ்.ஐ. ரஞ்சனியா அப்படி யாரும் வரலியே” 

“வரலியா உங்ககிட்டதான் லிஸ்ட் வாங்கிட்டு ரிப்போட் எடுக்க வந்தாங்க சார்”  
“அப்படி நாங்க யாரையும் அனுப்பலியே” 

சுந்தரம் அதிர்ச்சியுடன் கத்தினார் 

“சார் எங்க கடையில ஒரு திருட்டு நடந்திருக்கு” 

“அப்படியா நீங்க சி.சி.டி.வி மாட்டிட்டீங்களா?”




Tuesday, March 12, 2013

செம்பவம் சிறுகதை

எனக்கு ஏனோ பறவைகளை மிகவும் பிடிக்கும். அதற்காக பறவை ஆராய்ச்சியாளரோ, பறவைகளை காணும் சங்கத்தின் உறுப்பினரோ இல்லை. ஊருக்கு ஒதுக்குபுறமாக

தேரிப்பகுதியிலோ காட்டுப் பகுதியிலோ காற்றுடன், அமைதி  தேடிச் செல்லும் பொழுது அங்கே சுதந்திரமாக சந்தோசமாக திரியும் பறவைகளை கண்டுவிட்டால் என்னையரியாமல் ‘நீங்கள் எல்லாம் இங்கேயா இருக்கீங்க? சொல்லவே இல்ல’ என்று வாய்விட்டு சொன்னதுண்டு.
 ஙஇருசக்கர வாகனத்தில் பயணிக்கும்பொழுது காட்டுப்பகுதியில் சாலையின் நடுவே சிலசயம் யாரோ சிதறவிட்ட தானியங்களை பொறுக்கியபடி பறவைக் கூட்டம் நிற்பதுண்டு. அவ்வாறு காண நேர்ந்தால் அவைகளை கலைக்காமல் தூரத்திலேயே வண்டியை இரண்டு,மூன்று நிமிடங்கள் நிறுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பதுண்டு. அவை எவ்வித கவலைகளுமின்றி உண்டு மகிழ்வதை கண்டு ரசிப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் ‘சிட்டுக்குருவிகளைப் பாருங்கள் அவை விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை’ என்ற பைபிள் வசனம் மனதில் வந்து செல்லும். வயல்வெளியை உழும்பொழுது தெறித்து விழும் புழு பூச்சிகளை உண்பதற்கு சுற்றி வரும் பறவைக் கூட்டத்தை கண்டு மெய்மறந்ததுண்டு. 
 
ஆனால் சில நாட்களாக நான் அடிக்கடி காண்கிற காட்சி  என் நெஞ்சை பிசைய வைக்கிறது. சூரியன் விழித்து  வெகுநேரம் கழித்து விழித்து அவசர அவசரமாக கடன்முடித்து, குளித்து, உடுத்தி, உண்டு மனைவி தரும் மதிய உணவை வண்டி பெட்டியில் திணித்து, அலுவலகம் நோக்கி பாயும் ஜாதியை சேர்ந்தவன் நான். 15 கி.மீ சாலையில் தினமும் சென்று வருகிறேன். ஓராண்டுக்கு முன்னர்தான் அந்த சாலையை இருவழிச் சாலையாக அகலப்படுத்தினார்கள். சாலை அகலப் படுத்தப்பட்டதிலிருந்து அடிக்கடி உயிரினங்கள் அடிபட்டு சாவது சகஜமாகிவிட்டது. பெரிய திட்டங்களை அரசு தீட்டும் பொழுது சுற்றுசூழல் அலவலர்கள் எதிர்ப்பார்கள் இவர்களுக்கு வேறு வேலையில்லை என்று இகழ்ச்சியாய் நினைத்ததுண்டு. அது எவ்வளவு உண்மை என்று நேரில் காணும்போது புரிகின்றது.

மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது அந்த காட்சியை          காண்கிறேன். குறிப்பிட்ட ஒரு பறவை அடிபட்டு கிடக்கிறது ஏன் இந்த பறவை மட்டும் அடிக்கடி அடிபட்டு சாகின்றது என்று புரியவில்லை. அதன் பெயரும் தெரியவில்லை. ஒரு நாள் ஆனந்தபுரம் தாண்டியவுடன் ஒரு நாள் தைலாபுரம் ஓடைக்கருகில் பல இடங்களில் பார்த்ததும் மனம் பதறுகிறது. சிலநேரம் இறங்கி இறந்த பறவையை சாலையோரம் போட்டுவிட்டு செல்வேன். பல நேரம் நேரமின்மையால் கடந்து சென்றுவிடுவேன். மாலை திரும்பி வரும்பொழுது இறைக்கை சிதறி மாமிச சிதறலாய் கிடக்கும். அன்று இரவு தூக்கம் வராது. ஏன் அந்த இனம் மட்டும்? இயற்கை ஆர்வலர் அந்தோணிராஜாவுக்கு போன் செய்து விசயத்தை சொன்னேன். அந்த பறவையின் அடையாளத்தை கேட்டார். பழுப்பு நிறத்தில் உள்ளது. காக்கையை விட பெரியது. வால் நீளமாயுள்ளது என்று கூறினேன்.

‘ஆங் அதன் பெயர் செம்பவம் என்று கூறுவார்கள். செங்காகம் என்பது தான் பேச்சு வழக்கில் செம்பவம் என மருவியிருக்கும் என்பது என் கருத்து’ வயல்வெளியில் வேலியோரங்கள் திரியும் கரட்டான் என்ற சிறியவகை ஓனான்தான்  இதன் முக்கிய உணவு இந்த பறவையால் உயரமாகவோ, வேகமாகவோ பறக்க முடியாது. அதனால் தான் ரோட்டை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு சாகின்றது. தகுதியுள்ளது தப்பி பிழைக்கும் என்று முடித்தார்.

மனிதனின் சுயநலத்தினாலும் அந்த வளர்ச்சியாலும் ஒரு இனம் அழியும்போது இந்த வாசகம் எப்படி பொருந்தும்?

இரண்டு வாரமாக அந்த காட்சியை காணமுடியவில்லை தெரியவில்லை. ஒருவேளை செம்பவம் வாழும் தகுதியை பெற்றுவிட்டதா அல்லது இந்த பகுதியில் அந்த இனமே அழிந்து விட்டதா இன்று காலை எங்காவது தென்படுகிறதா என்று வேலியோரங்களால் கவனித்தபடி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். ஆனந்த இசக்கியம்மன் கோவிலை தாண்டி ஒரு திருப்பத்தில் அட சட் சுதாரித்து பிரேக் போடுவதற்குள் என் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது ‘செம்பவம்’.’

Monday, March 11, 2013

பகுத்தறிவு சிறுகதை

சூடு பறந்து கொண்டிருந்தது அடுப்படியில் இல்லை. நிலா தொலைக்காட்சி நடத்தும் உனதா எனதா நிகழ்ச்சி ஒளிப்பதிவின் போது.

ஆவிகள் உண்டு என்று ஒரு அணியும், ஆவிகள் இல்லை என்று அணியும்

அவரவர் கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தனர்.

ஆவிகள் உண்டு என்ற தலைப்பில் பேசிய ஆவி மீடியம் சுந்தர்ராமன் ஆவிகள் உலகத்தை பற்றியும் ஆவிகள் செயல்படும் விதத்தை பற்றியும் விளக்கி கொண்டிருந்தனர். அவர் மூலம் தங்களது இறந்து போன முன்னோர்களின் ஆவிகளிடம் பேசி குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டவர்கள் தங்களது அனுபவங்களை கூறி ஆவிகள் உண்டு என்ற அணிக்கு வலு சேர்த்துக் கொண்டிருந்தனர்.

இவை அனைத்தையும் தனது வாதத்திறமையால் மறுத்துக் கொண்டிருந்தார் பகுத்தறிவு பகலவன் செந்தமிழ் செம்மல் என்று பல பட்டங்களை பெற்ற இளவேந்தன். தனது ஆணித்தரமான கருத்துக்களால் ஆவிகள் உண்டு என்ற அணியினரின் மூக்கை அறுத்துக் கொண்டிருந்தார். அவர் பேசும் ஒவ்வொரு தடவையும் பார்வையாளர் பகுதியில் இருந்து கைதட்டலும் கரவொலியும் எழுந்தன.

நிகழ்ச்சியின் இறுதிபகுதியில் இளவேந்தன் ‘என்னைப் பொறுத்தவரை ஆவி என்றால் உலகத்தில் ஒன்றே ஒன்றுதான் உண்டு. அது நீராவி மட்டும்தான். பேய் என்றால் ஒன்றே ஒன்றுதான் அது ஒவ்வொரு ஆண்களுக்கும் திருமணத்திற்குப் பின் வாழ்க்கையில் காண்பது மட்டும்.’ என்று கூறி அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்தார்.

ஒளிப்பதிவு முடிந்தது. அனைவரும் விடைபெற்றுக்கொண்டிருந்தனர். ‘பகுத்தறிவு பகலவன்’ இளவேந்தன் ஆவி மீடியம் சுந்தர்ராமனை தனியே அழைத்தார்.

தனியறையில் ‘சுந்தர்ராமன் சார். எனக்கு உங்க அப்பாயிண்ட்மெண்ட் வேணும் எப்ப கிடைக்கும்’.

‘என் அப்பாயிண்மெண்டா எதுக்கு?’ ‘இல்ல இறந்து போன எங்கப்பா ஆவியோட சொத்து விசயமா கொஞ்சம் பேசணும்.’



நெஞ்சுவலி சிறுகதை

                                      
                    சங்கரலிங்கத்துக்கு குளிர்போட்டு ஆட்டியது. குளிர் என்றால் வெப்பத்துக்கு எதிர்பதமான குளிர் இல்லை. பேராசை என்னும் குளிர்.
தரகர் பொன்னம்பலம் வந்து சென்றதிலிருந்து தான் அவருக்கு இந்த நிலைமை

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.