Wednesday, March 5, 2014

முடிவே……முடிவாகாது

உண்மை கதை.  எழுதியவர் தா. ராசாமணி

“மனம் தன்னுடைய நிலையில், அதுதானே நரகத்தை சொர்க்கமாகவும், சொர்க்கத்தை நரகமாகவும் உருவாக்க முடியும்”-மில்டன் 

மப்பும் மந்தாரமுள்ள இரவு. எங்கும் நிசப்தம், இடை இடையே மெல்லிய ஒளிக் கீற்றான மின்னல்கள். 

இரவு மணி ஒன்று என்று பெரிய சப்தத்தை எழுப்பி தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது மாதா கோவில் கடிகாரம். 

எனக்கு தூக்கம் அன்று ஏனோ வரவில்லை! நான் எவ்வளவோ முயற்சித்தாலும் தூக்கம் என் கண்களுக்கு வரவில்லை. 
பக்கத்து அறையின் என் மனைவியும் குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தனர்……

அந்த இரவின் மயான அமைதியை கலைப்பது போல் என் வீட்டின் தொலைபேசி ஒலித்தது. 

என்னருகில் தொலைபேசி இருந்ததால், நான் அதை என் காதில் வைத்து….. “ஹலோ…பேராசியர் சந்திரன்…”என்றேன். 

“சார் நான் உங்கள் பழைய மாணவி வசந்தி பேசுகிறேன்….” 

“வசந்தியா….யாரும்மா……!இப்பொழுது எங்கள் கல்லூரியில் படிக்கிறாயா…? 

“சார்….நான் 2008யில் நம்ம கல்லூரியில் பட்டபடிப்பு முடித்தேன் சார். உங்கள் மாணவி சார்…..கல்லூரியில் எல்லா போட்டிகளிலும் குறிப்பாக பரத நாட்டியத்தில் கலந்து பரிசுகள் பெற்றி இருக்கிறேன்……நான் அப்பொழுது என் குடும்ப சூழ்நிலைகளை உங்களிடம் சொல்லி இருக்கிறேன்…..நீங்கள் எனக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறீர்கள்……சார்”  

“ஆமாம்….ஆமாம்…..இப்பொழுது தான் ஞாபகம் வருது….பல்கலைத் தேர்வில் நீ தங்கப்பதக்கம் கூட பெற்றாயே….! 

“ஆமாம்…..சார்……நான்தான் சார்….. 

“இப்பொழுது என்ன காரியமா இரவு ஒரு மணிக்கு போன் செய்கிறய்…..?” 

“சார்…..என்னுடைய வாழ்க்கையின்….கடைசி மணித்துளிகளில் இருக்கிறேன்…. ஆமாம்…..சார்…..நான் தற்கொலைச் செய்துக் கொள்ள போகிறேன்.  அதற்கு முன் உங்களிடம்….என் கவலைகளை, வேதனைகளைச் சொல்ல வேண்டும் என நினைத்தேன்….சார்……தயவுசெய்து உங்களை தொந்தரவுபடுத்துவதற்கு மன்னியுங்கள்…..சார்…..எனக்கு அம்மா….அப்பா….அல்லது சகோதரிகள், சகோதரர்கள் எனக்கு யாரும் இல்லை…..அதனால் தான் நான் என் வாழ்வின் கடைசி முடிவில் உங்களிடம் பேச விரும்புகிறேன்…’. அவள் சற்று நிறுத்தினாள். அவள் அழுதுக் கொண்டிருக்கிறாள் என்பதை அவளுடைய விம்மலின் ஒலி மூலம் அறிந்துக் கொண்டேன். 

அவளுடைய கவலைத் தோய்ந்த பேச்சைக் கேட்டதும் நான் திடுக்கிட்டேன். 

வாழ்வின் முடிவில் ஒரு பெண்; அதுவும் என்னிடம் பேச விரும்புகிறாள்… எனக்கு ஒன்றும் ஒடவில்லை இதயம் படபடத்தது. வியர்வை உடம்பை நனைத்தது. 

வசந்தி ஒரு அருமையான, என் அன்புக்கு பாத்திரமான மாணவி… ஒழுக்கத்திலும் படிப்பிலும், பரத நாட்டியத்திலும் சிறந்து விளங்கியவள் அவள் கல்லூரியில் படிக்கும் பொழுது அவளுடைய அம்மா உயிரோடு இருந்தார்கள்.  கூலி வேலைகளைச் செய்து கொண்டே தான் மகளை படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்…….இன்று உயிரோடு இல்லை போலும்…..!  

“அம்மா…..வசந்தி…..அழாதே…..!ஏன் தற்கொலை?ஏன் இந்த அதிதீவிரமான முடிவுக்கு வந்திருக்கிறாய்…..?கவலைப்படாதே….!எல்லாம் சரியாய் போய்விடும்…..!”   

“இல்லை சார்…..என் நிலை இனி சரியாகாது…..இனி என் வாழ்க்கையில் எனக்கு எந்த பிடிப்பும் இல்லை…..
“ஆமாம்…..உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?”-அவளுடைய மனதை மாற்ற இந்த கேள்வியை கேட்டேன். 

“நான் கல்லூரி படிப்பை முடித்ததும், வேலைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது தான் இந்த மாப்பிள்ளையை என் அம்மா பார்த்தார்கள்.  எங்களைவிட பணக்காரர், அழகானவர், படிப்பு சுமார். என் அம்மாவுக்கு இந்த மாப்பிள்ளையை பிடித்துவிட்டது ரொக்கம் வேண்டாம் என்றார்கள். நான் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும், இப்பொழுது திருமணம் வேண்டாம் என என் அம்மாவிடம் கூறினேன், ஆனால் என் அம்மா இந்த திருமணத்திற்கு அவசரப்படுத்தினதால், நான் சம்மதித்தேன்” 

“திருமணம் செய்துக் கொள்ளுவது நல்லதுதானே அம்மா…..!அதைதான் உன் அம்மா உனக்கு செய்திருக்கிறார்கள்….”நான் சொன்னேன்.      

“நானும் அப்படி நினைத்து தான் திருமணத்திற்கு சம்மதித்தேன்.  ஆனால் திருமணம் ஆன சில மாதங்களுக்கு பின் தான் அந்த ஆள்- என் கணவரின் நடவடிக்கையை அறிந்தேன்.  சரியாக வேலைக்கு போவதில்லை, சரியான குடிகாரர், மேலும் பல பெண்களின் தொடர்பு…..”  

“அட…..அட….அவர் ஓழுக்கமான ஆள் இல்லை….அப்படிதானே…..?”-நான் கேட்டேன்.

“ஆமாம் சார்…..சில பெண்களை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருவார்…..நான் அவர்களுக்கு சமையல் செய்ய வேண்டும்…..என்னிடம் அன்பாக இருப்பதில்லை…. கடந்த ஆறு மாதமாக இந்த துயர நிகழ்ச்சி நடைப்பெற்றிருந்தது. 
“மேலும்……”-அவள் சற்று தன் பேச்சை நிறுத்தினாள்…..       

“மேலும்…..என்னம்மா……”-நான் கேட்டேன்.

“மேலும்…..நான் போட்டிருந்த என் நகைகளை எல்லாம் விற்று விட்டார்…. என்னை ஒரு அடிமைபோல் நடத்தினார். என்னால் தாங்க முடியாத நிகழ்ச்சி இந்த இரவு நடைபெற்றுள்ளது…..”

“அது என்னம்மா…..!”

அவரும்-அந்த விலைமாதுவும் ஒன்றாய் காமகளியாட்டதில் ஒன்றாய் இருப்பதை நான் பார்க்க வேண்டுமாம்…..அது அவருக்கு அதிக “கிக்” தருமாம்…நான் மறுத்தேன்…எனக்கு “அடி உதை…..”அவர்கள் பக்கத்து அறையில் இருக்கிறார்கள்… நான் என் வாழ்வை முடித்துக் கொள்ள ஒரு கயிற்றை எடுத்து பேனில் மாட்டிக் கொண்டேன்…அந்த நிலையிலிருக்கும் பொழுது தான் உங்கள் நினைப்பு வந்தது…என் கல்லூரி நாட்களில் மாணவ மாணவிகளுக்கு எவ்வளவு அறிவுரைக் கூறினீர்கள் மாணவர்களான எங்களை நேசித்தீர்கள்.  எனவே இந்த என் வாழ்க்கையின் முடிவில் உங்களோடு பேச விரும்பினேன்…..”

“அம்மா…ஒரு முடிவு எப்பொழுதும் நிரந்தர முடிவாகாது. தயவு செய்து…சற்று யோசித்துப்பார்…நீ உன் வாழ்வை முடித்துக் கொள்ளுவதால் உன் கணவனுக்கு தான் முழு சுதந்திரம் கிடைக்கும்…உனக்கு தான் உன் வாழ்வு நஷ்டமடையும்…எனவே தற்கொலை முயற்சியை உடனே நிறுத்து….”நான் பதட்டதோடு கூறினேன் “இல்லை சார்…..இனி நான் உயிரோடு இருந்து எந்த லாபமும் இல்லை….இந்த உலகத்தில் எனக்கு யாரும் இல்லை…..மரணம் ஒன்றுதான் என்னைப் போன்ற அனாதைகளுக்கு நல்லதொரு தீர்வு……!நிரந்தர தீர்வு…..”உங்களிடம் பேசியதால்…..மாணவர்களின் அன்புக்குறிய – குறிப்பாக எனக்கு அன்பான என் ஆசிரியரிடம் எல்லாம் கடைசியாக கூறிவிட்டேன்…..இனி என் நெஞ்சின் பாரத்தை இறக்கி வைத்த மகிழச்சியுடன் நான் தற்கொலைச் செய்துக் கொள்ளுகிறேன்…..இவ்வளவு நேரம் என் சோக கதையை பொறுமையாக கேட்டதற்கு நன்றி சார்…..குட்பை……”
வசந்தி போனை கீழே வைக்க முற்பட்டதை அறிந்து மிக அவசரமாக… “வசந்தி…..வசந்தி…..”என சத்தமாக கூப்பிட்டேன். இறப்பின் விளும்பில் இருக்கும் ஒரு பெண்ணின் கடைசி வார்த்தைகள் என்னை….என் உள்ளத்தை உடைத்துப் போட்டன…..! “என்ன சார்….”ஈனக்குரலில் வசந்தி பதிலளித்தாள்.

“வசந்தி…..இவ்வளவு நேரம் நீ பேசினாய்…..எனக்கு சற்று சில நிமிஷங்களைக் கொடு…..அதுதான் என் வேண்டுகோள்…..!வசந்தி…..நீ உன் பேராசிரியருக்கு கொடுக்கும் கடைசி மரியாதை இதுதான்…..போனை அவசரப்பட்டு வைத்துவிடாதே…..”நான் சற்று பதட்டதோடு பேசினேன்.               

“என் அன்பான பேராசிரியர்க்கு நான் கொடுக்கும் மரியாதை இது வென்றால்… நீங்கள் பேசுங்கள் சார்…..”வசந்தி. 

“வசந்தி…..வாழ்க்கை என்பது நாம் விரும்புவதை எல்லாம் அனுபவிப்போம்…. கிடைக்கும் என எண்ணக் கூடாது. வாழ்க்கை என்பதே பிரச்சனைகள் மத்தியில் வாழ்வது தான்…..மில்டன்…..என்ற கவிஞன் தன்னுடைய “பேரடைஸ் லாஸ்டு என்ற காப்பியத்தில் மிக அழகாக சொல்லுகிறார். “நம்முடைய உள்ளம் சரியான நிலையில் இருக்கும் பொழுது நாம் நரகத்தை சொர்க்கமாக மாற்றலாம். சொர்க்கத்தை நரகமாக மாற்றலாம்”. எல்லாம் நமது மனதைச்சார்ந்தது. கடலில் வாழும் மீன்கள் அழகாக குதித்து நீந்தி விளையாடும். அந்த மீன்களை பிடிக்க, மீனவர்களின் வலை வீச்சு, பெரிய மீன்கள் அந்த சிறிய மீன்களை பிடிக்க வாயைப்பிளத்துக் கொண்டு வரும்… ஆனால் அந்த சிறிய மீன்கள் மிக சாமத்தியாக தங்களுடைய விரோதிகளிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளுகின்றன, அவை அறிவுள்ள மீன்கள். சில மீன்கள் “ஐயோ….!எவ்வளவு ஜீவ போராட்டமா?” என எண்ணி….சில வினாடிகள் கவலையால் துவளும் பொழுது மனிதன் விரிக்கும் வலைக்கும், பெரிய மீன்களுக்கும் இரையாக்கின்றன.

ஒரு அறிஞன் சொல்கிறான் “நம்முடைய விரோதிகள் நம்முடைய நரம்புகளை முறுக்கேற்றுகிறார்கள்” என்கிறார். 

“மன்னிக்கனும் சார்….நான் என் கணவரிடம் எவ்வளவோ போராடியிருக்கிறேன்.  அழுது பார்த்தேன்; கெஞ்சிப்பார்த்தேன்; கோபப்பட்டு பார்த்தேன். ஒரு பலனும் இல்லை. சார்…..எனக்கு யாரும் துணை இல்லாததால்…என்னை அதிகமாக சித்திரவதைச் செய்கிறார். தவிர எந்த நல்ல மாற்றமும் அவரிடம் காணவில்லை சார்……     

“வசந்தி….உன்நிலை எனக்கு நன்கு புரியுதும்மா. உன் கணவர் ஒரு சைக்கோ போல் செயல்படுகிறார் என நினைக்கிறேன்.  இந்த நிலையில்தான் நீ தைரியமாக ஒரு முடிவு எடுக்கனும் வசந்தி…நீ ஏதாவது வேலைக்கு போனால், நிச்சயம் உன் நிலை உறுதிப்படும்…உள்ளுரில் நீ ஏதாவது வேலைப் பார்த்தாலும் உனக்கு நல்லது என எண்ணுகிறேன்”.  

“உள்ளுரில் நான் கஷ்டப்பட்டு வேலைத் தேடினேன். வேலையையும் பார்த்தேன். ஆனால் நான் எந்த வேலைக்கும் போக கூடாது…அவருக்கு சமையல் மட்டும் செய்தால் போதும் எனக் கூறி, நான் வேலைப் பார்த்த இடங்களில் எல்லாம் தகராறு செய்து என்னை வேலையிலிருந்து நிறுத்திவிட்டார்…சார். இனி நான் உள்ளுரில் வேலைப்பார்க்க முடியாது சார்…வசந்தி தன் கண்ணீரின் கதையை எடுத்து கூறினாள்.  

“வசந்தி…நான் ஒரு முக்கியமான ஆலோசனைத்தரவா…?”-நான் கேட்டேன்.

“சொல்லுங்க சார்……”     
“வசந்தி…..உன் கணவன் இருக்கும் நிலையில் நாம் எதுவும்…..செய்ய முடியாது…..நீ தான் ஒரு முடிவு எடுக்கணும்….அதாவது உன் நிலையை விளக்கி உன் கணவனுக்கு ஒரு கடிதம் எழுதிவை. பின் சென்னையில் என் நண்பர் ஏற்றுமதி இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் போனால் உனக்கு நிச்சயம் உனக்கு ஒரு வேலைத் தருவார். நான் உன்னைப்பற்றி அவருக்கு போன் பண்ணி, உனக்கு வேலைத்தர சொல்லுகிறேன்…..என்ன சொல்லுகிறாய்? 

“வாழ்க்கையின் முடிவில் இருக்கும் எனக்கு வேலைப் பார்க்க விருப்பமில்லை சார்…..” 

“வசந்தி….மாணவர்கள் பொது தேர்வில் வெற்றிப் பெறாவிட்டால் அடுத்து வரும் தனித் தேர்வில் எழுதி வெற்றிப் பெறுவதில்லையா…..?எனக்காக இந்த முயற்சியில் இறங்கு….வெற்றி உனக்கு நிச்சயம்……!”  

“சரி…..சார்….முயற்சிச் செய்கிறேன்”-

“என் நண்பரின் விலாசத்தை குறித்துக்கொள், உனக்கு சென்னைக்கு போக பணம் இருக்கிறதா…..?” 

“இருக்கிறது சார்….உங்கள் நண்பரின் விலாசத்தை சொல்லுங்கள் சார்… அதிகாலை ஐந்து மணிக்கு சென்னைக்கு ரயில் இருக்கிறது சார். அதில் போகிறேன்…” 

நான் என் நண்பரின் விலாசத்தைக் கொடுத்து, அவளை சமதானம் படுத்தினேன்.  அவள் காலையில் ரெயிலைப் பிடித்திருந்தால், மதியத்திற்குள் சென்னை சென்றிருக்கலாம்…ஆனால் இதுவரை வசந்தியிடமிருந்தோ…என் நண்பரிடமிருந்தோ எந்த செய்தியும் வரவில்லை. அவள் சென்னை சென்றாளா? அல்லது தற்கொலை செய்துக் கொண்டாளா…..?தெரியவில்லை….”என கூறிய நான் அந்த ரயில்வே நிலையத்திற்கு வெளியே இருந்த சிமெண்ட் பெஞ்சுகளில் அமர்ந்திருந்த என் வயோதிக நண்பர்களை கூர்ந்து பார்த்தேன். 

“பேராசிரியர் சந்திரன் சார் நீங்கள் சொன்ன செய்தி துப்பறியும் கதையில் வரும் நிகழ்ச்சிப் போல் இருக்கிறது சார்…..”என்றார் முன்னால் தபால் துறை அதிகாரி சுவர்ணமாணிக்கம்…

“பெரிய சஸ்பெண்டாக இருக்கு சார்…! வசந்தி இப்பொழுது உயிரோடு இருக்கிறாளா? இல்லையா? அதுதான் இப்பொழுதுள்ள கேள்வி” எழுத்தாளர் ஆறுமுகப்பொருமாள் சொன்னார்…

“பெண்கள் சமுதாயத்தில் எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது” என்றார் பேராசிரியர் காசிராஜன்…  

முதியோர்களின் உரையாடலை கலைப்பது போல் பேராசிரியரின் செல்போன் ரீங்காரமிட்டது….

முதியோர் அனைவரும் திகிலோடு பேராசிரியர் சந்திரனின் செல்போனின் உரையாடலை கவனிக்க தொடங்கினர். 

பேராசிரியர் செல்போனில் உள்ள ஸ்பீக்கரை “ஆன்” பண்ணிவிட்டு பேச ஆரம்பித்தார்… 

“சார்…நான் உங்கள் மாணவி வசந்தி பேசுகிறேன். 

“என்ன வசந்தி…உன்னுடைய போனுக்காக காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறேன்…இனி விஷயத்தைக் சொல்லு…”     

“சார்…நீங்கள் சொன்னது போல் சென்னையில் உங்கள் நண்பரைப் பார்த்தேன். 

“அவருடைய கம்பெனியில் எழுத்தர் பணியை கொடுத்திருக்கிறார். மேலும் அவர் நடத்துகிற மன வளர்ச்சிகுன்றிய குழந்தைகளில் காப்பாகத்தில் எனக்கு தங்க இடம் அளித்திருக்கிறார். சார் இதுவரை வாழ்க்கையில் நான் தான் அதிகம் துன்பபடுகிறேன் என நம்பினேன். ஆனால் இந்த மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை பார்க்கும் பொழுது நான் எவ்வளவோ பாக்கியசாலி…..ஆசீர்வதிக்கப்பட்டவள் சார்….மேலும் இந்த காப்பகத்தில் சனிகிழமை….ஞாயிற்று கிழமைகளில் நடனம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.  அந்த நடன வகுப்பில் என்னையும் ஆசிரியராக என்னை பணியாற்ற சொல்லியிருக்கிறார்…..”   

“அது சரி….இனி உன் குடும்ப வாழ்க்கை….. 

“சார் நான் பாரதி கண்ட புதுமை பெண். இனி எனக்கு இருந்த குடிகாரன் பெண் பித்தனோடு இருந்த மனைவி என்ற பந்தம் அறுந்து விட்டது சார்…நீங்கள் சொன்னது போல் ஒரு முடிவே முடிவல்ல, ஒரு முடிவு….இன்னொரு வாழ்க்கையின் ஆரம்பம் என்பதை கண்டுக் கொண்டேன். இந்த குழந்தைகள்…. மனவளர்ச்சி குன்றிய இந்த குழந்தைகள் தான் என் குழந்தைகள்…இந்த அருமையானபுதிய வாழ்வை அமைத்துக் கொடுத்த உங்களுக்கு என் இதய பூர்ணமான நன்றி சார்…..”  

“இறைவன் உன்னை என்றும் ஆசீர்வதிப்பார் என் மகளே….”என கூறிய பேராசிரியர் தன்போனை ஆப் செய்தார்.  

“மிக்க மகழ்ச்சி…சார்…ஒரு பெண்ணுக்கு புதுவாழ்வை ஏற்படுத்திய உங்களுக்கு எங்கள் நன்றி சார்”-என தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் அந்த முதியவர்கள். 

ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியரான எனது நண்பர் திரு  தா. ராசாமணி அவர்களுக்கு தமிழ்ச்சிறுகதைகள் எழுதுவதில் அலாதிப்பிரியம்.புதியத்தென்றல் என்ற இதழில் வெளிவந்த இந்தக்கதையே நட்புக்காக எனது தளத்தில் வெளியிடுகிறேன்.


தமிழாய் மாறிய ஆங்கிலம்

                      ஒரு மூலமொழியிலிருந்து கிளைத்து எழுவது பல மொழிகள் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பிட்ட ஒரு மொழி பேசும் இனமக்களின் ஒரு பிரிவினர் .வெவ்வேறு பகுதிகளில் குடியேறும் பொழுது அந்தந்த கால, இட, சூழ்நிலைக்கேற்ப அவர்களின் மொழி திரிந்தும், வேற்று மொழிக்கலப்பினாலும் புதிய மொழி உருவாகும்.

                ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டால் பல்வேறு மொழிகளிலும் உள்ளச் சொற்களையும் தமதாக்கிக் கொண்டது.தமிழிலிருந்தும் பல சொற்கள் ஆங்கிலத்துக்குச் சென்றுள்ளது. உதாரணம் அரிசி ரைஸ் இஞ்சி சிஞ்சர்.

                அதே போல் தமிழ்ச்சொற்களாய் மாறிவிட்ட பல ஆங்கிலச் சொற்கள் உண்டு.சென்னையில் உள்ள பார்பர்ஸ் பிரிட்ஜ் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஹாமில்டன் என்ற ஆங்கிலேயேர் கட்டிய பாலம் பேச்சு வழக்கில் அம்பட்டன் பாலம் என்று திரிந்து மீண்டும் அதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தபோது பார்பர்ஸ்பிரிட்ஜ் ஆனது.

                அதே போல் சென்னையில் ஆங்கிலேயர் கடற்படையை ஏமாற்றி திடீர் தாக்குதல் நடத்திய எம்டன் என்ற நீர்மூழ்கி கப்பல் நடத்தியது. அதிலிருந்து மிக சாமர்த்தியமாக ஏமாற்றுவர்களுக்கு எம்டன் என்ற பெயர் தமிழ்நாட்டில் உருவாகியது.
               
                வில்லன் என்பது ஆங்கிலச் சொல். அதிலிருந்து உருவான வில்லங்கம் என்ற சொல் பத்திரபதிவுத்துறையில் பிரபலம். இங்கு அநேக  சொத்துக்கள் வில்லங்கத்தில் மாட்டித் தவிப்பது வேறு கதை.

                கிறிஸ்தவ நெறியில் ஆங்கிலச் சொற்களை பெயராக வைத்துக் கொள்வது அனைவரும் அறிவோம்.ஆனால் தென் மாவட்டங்களில் இரண்டு ஆங்கிலச் சொற்கள் இந்துக்களின் பெயர்ச் சொற்களாக மாறி விட்டதை அறிவீர்களாஅதுவும் அவை இரண்டும் இரண்டு தெய்வங்களை குறிக்கும் பெயர்ச் சொற்கள் ஆகும்.

பிரசித்தி பெற்ற காவல்தெய்வமான சுடலைமாடன் தனது பக்தருக்காக ஒரு வழக்கில் உயர்நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொன்னதாக ஒரு கதை உண்டு. ஹைகோர்டில் வந்து சாட்சி சொன்னதால் அவரின் மற்றொரு பெயரான மகாராஜனுடன் சேர்த்து ஐகோட்மகாராஜன் என்று அழைப்பதுண்டு. அவரின் பக்தர்கள் ஐகோட் மகாராஜன் என்று தமது குழந்தைகளுக்கு பெயர் வைத்து ஐகோட்டு என்று அழைப்பது வழக்கம்.

                அந்த பெயருள்ளவர்கள் தனது பெயரை HIGHCOURT என்று எழுதுவதில்லை.ICOT என்றோ IKOT என்றோதான் எழுதுகிறார்கள்.
               
                அதே போல் தமிரபரணி ற்றங்கரையில் ஏரல் சேர்மன் அருணாச்சலசாமி கோயில் உள்ளது.சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அருணாச்சலம் என்பவர் நல்லொழுக்கமுள்ளவராக திகழ்ந்தவர். அவரது ஊரில் சேர்மனாக பதவி வகித்தவர் சிறு வயிதிலேயே இறந்துபோன இவர் பல அற்புதங்களை நிகழ்த்தினாராம். அவருக்குப்பின்னர் கோயில் எழுப்பப்பட்டு அக்கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. அவரது பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சேர்மன் என்று பெயர் வைப்பது வாடிக்கையானது. அவர்கள் தங்கள் பெயரை ஆங்கிலத்தில் CHAIRMAN  என்று எழுவதில்லை. SERMAN என்று தான் எழுதுகிறார்கள்..        

                இன்னும் பல சொற்கள் இருக்கலாம் அறிந்தவர்கள் பதிவிடலாம்.

                 


Friday, September 27, 2013

விண்வெளி விண்வெளி

         
                   கி.பி.2100
அந்த நவீன விண்வெளி ஓடம் ஒரு புதிய உடுமண்டலத்தில் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த்து. அது ஒளியின் வேகத்தில் பயணிக்கும் திறன்கொண்டது. அந்த விண்வெளி ஓடத்தை இருவர்  செலுத்திக் கொண்டிருந்தனர்.
           ‘’நண்பா நமது பயணம் எப்போது முடியும்?
            ‘’இன்னும் நான்கு புதிய கிரகங்களில் இறங்கி ஆய்வுசெய்து நமது ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டுமல்லவா?’’
             ‘’அப்படியானால் இன்னும் நான்கு மாதங்கள் ஆகிவிடும்’’
              ‘’அதோ ஒரு புதிய கிரகம் தெரிகிறது. அருகில் சென்று பார்ப்போம்’’
              விண்வெளி ஓடம் மெதுவாக அந்த புதிய கிரகத்தை நெருங்கியது.பெரும்பகுதி நீரால் சூழப்பட்டிருந்த அந்த கிரகத்தை சுற்றி வந்தது.
           ‘’தண்ணீர் இருப்பதால் உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறு உள்ளது. இன்னும் தாழ்வாக பறந்து பார்க்கலாம்’’
          ‘’அதற்கு முன் தற்காப்புகான ஆயுதங்களை அலெர்ட் செய்துகொள்வோம். எப்படிப்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தெரியாதல்லவா?’’
‘’சரியாகச் சொன்னாய்’’
     அனைத்தையும் ஆயத்தம் செய்துவிட்டு கிரகத்தின் நிலப்பகுதியில் தாழ்வாகப் பறக்கத் தொடங்கினார்கள்.
     நிலப்பகுதி முழுவதும் மிகப்பெரிய கட்டிடங்கள்,உயர்ந்த கோபுரங்கள் நிறைந்திருந்தன. ஆனால் அவை அனைத்தும் சிதிலமடைந்துபோய் கிடந்தன. உயிரினங்கள் ஒன்றையும் காணோம். ஆச்சிரியப்பட்டுப் போனார்கள்.
           ‘’சமீப காலத்தில்தான் அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கின்றன போலும்’’
             ‘’’ஆம் அப்படித்தான் தெரிகிறது. தரையிறங்கி பார்ப்போமா?
             திடீரென்று விண்வெளி ஓடத்தில் அபாய விளக்கு சிகப்பு நிறத்தில் எரிந்தது. அபாய ஒலியும் ஒலித்தது
              கட்டுப்பாட்டு அறையிலிருந்து குரல் ஒலித்தது.
              ‘’கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேசுகிறேன் நீங்கள் மிகவும் ஆபத்தான கிரகத்துக்குள் நுழைந்திருக்கிறீர்கள். உடனே வெளியெறவும்’’
               .’’ஏன் என்ன விசயம்’’ 
  ‘’’ அதீத விஞ்ஞான வளர்ச்சியால்  சுற்றுச்சூழல் மாசுப்பட்டு அங்கே வாழ்ந்த உயரினங்களெல்லாம் அழிந்து விட்டன. உயிருக்கு ஆபத்தான ரசாயன வாயுக்களும்,கதிரியியக்கமும் கிரகம் முழுவதும் சூழ்ந்திருக்கின்றன.உடனே வெளியேறவும்.’’
               ‘’அப்படியா இந்தக் கிரகத்தின் பெயர் என்ன?’’

                                                ‘’ பூமி.

Friday, September 20, 2013

அம்மா தண்ணீர் குடிக்கலாமா?

‘போகிற போக்கை பாத்தால் தண்ணீரைக்கூட விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் போல’ இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நகைச்சுவையாக இப்படி கூறுவதுண்டு. அது வெகுவிரைவிலேயே உண்மையானதுடன் ஏர் பார்லர் என்ற பெயரில் தூய்மையான காற்றை விலை கொடுத்து வாங்கி சுவாசிக்கும் காலமும் வந்துவிட்டது.
தண்ணீர் இன்று காசு கொட்டும் முக்கியமான தொழிலாக மாறிவிட்டது. எங்கும் தண்ணீர் பஞ்சம் இருக்கையில் இவர்களுக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறதோ தெரியவில்லை.
முறையான தரச்சான்று இல்லாமல் ஒழுங்காக சுத்திகரிக்கப்படாமல் பாட்டில் தண்ணீர் விற்பனை செய்யப்படுவதும் அதை அரசு அவ்வப்போது கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் தொடர்கிறது.
ஒழுங்காக முறையாக சுத்திகரிக்கப்பட்டாலும் அந்த தண்ணீர் உயிரற்ற நீர்தான் என்றும் இயற்கையான தண்ணீரில் இருக்கும் தாது உப்புகள் நீக்கப்படுவதாலும்,நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதாலும் உடல் ஆரோக்கியத்து கேடு என்றும் ஹீலர் பாஸ்கர் போன்றவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
  இந்நிலையில், அம்மா வாட்டர் என்ற பெயரில் அரசு தண்ணீர் விற்பனையை ஆரம்பித்துள்ளது.
ஒரு அரசின் கடமை என்ன?  நீதி, நிர்வாகம்,பாதுகாப்பு மற்றும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும் ஆகும். சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்யவேண்டியது ஒரு அரசின் பொறுப்பு ஆகும். அதை விடுத்து அரசே தண்ணீர் வணிகத்தில் ஈடுபடுவது தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் முறையற்ற செயலாகும். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒவ்வொரு வீடுகளுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப சுத்திகரிக்கப்பட்ட நீர் உயர் அழுத்தத்தில் அரசு வழங்குகிறது. நாம் அந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை.
வெளிச்சந்தையில் அதிக விலைக்கு தண்ணீர் விற்கப்படும் நிலையில், புதிய நீர் ஆதாரங்களை கண்டறிந்து, புதிய திட்டங்களை தீட்டி அதில் முதலீடு செய்து மக்களின் தேவையை பூர்த்தி செய்தால் அதற்காக பெருமைப்படலாம்.
அதைவிடுத்து நாங்களே குறைந்த விலைக்கு தண்ணீர் தருகிறோம் என்று கூறுவது வெட்கப்படவேண்டிய விஷயமாகும்.
ஏற்கனவே ஒரு தண்ணீர் விற்பனையில் அரசு அதிகம் சம்பாதித்து வருவதால் இந்த தண்ணீர் விற்பனையிலும் லாபம் பார்க்கலாம் என்ற எண்ணமா இல்லை நமது குடிமகன்கள் மதுவில் கலப்பதற்கு அதிக விலை கொடுத்து ‘வாட்டர் பாக்கெட்’ வாங்கி கஷ்டப்படுவதால் அவர்களுக்கு உதவும் நோக்கில் மலிவு விலையில் தண்ணீர் கொடுக்கலாம் என்ற நல்ல எண்ணமா தெரியவில்லை.
அரசு மது பார்களில் அம்மா வாட்டர் விற்கப்படுகிறதா அங்கு என்னவிலை என்று விபரம் அறிந்தவர்கள் கூறுவார்களாக!

Sunday, June 30, 2013

குறுங்கவிதைகள்

*புற்றுநோய்க்கு பயந்து
 புகையை கைவிட்டது
 மின்சார ரயில்!
*துருப்பிடித்து தவமிருக்கிறது
 செல்போன் அழியட்டும் என்று
 தபால்பெட்டி!
*எப்படியும் தேடி வருவார்கள் என்று
 நம்பிக்கையோடு மூலையில்
 முடங்கிக்கிறது குடை!
*அருவி கருமையாக கொட்டுமோ
 உன் கூந்தல்?
*இலக்கியம் பேசுகின்றன உன் விழிகள்!
  இலக்கணம் மீறத்துடிக்கிறது என் மனம்!
*கடற்கரையில் காதல்
 ஒரு சுண்டல் பொட்டலம் தின்று முடிக்கும் நேரத்தில்
 கசக்கி எறியப்படுகிறது அந்த காகிதத்தைப்போல இன்று!
 ஒரு அலை வந்து திரும்பிச்செல்லும் நேரத்தில் மறைந்துவிடும் நாளை!
*பனிமூடிக்கிடக்கிறாயே என்று கொஞ்சம் விளையாடிப் பார்த்துவிட்டோம்
 உள்ளே உன் தேகம் கொதிப்பேறிக் கிடக்கிறது என்பதை அறியாமல்!
*காதோரம் வெண்மை!
 குன்றாத கற்பனை! குறையாத எழுத்துக்கள்!
 உருமாறும் பாத்திரங்கள் சமையலறையில்!
*அழகிய கணணியால் பத்து விரலும் பேனாவாய் மாறினாலும்
 ஒழுகிய பேனாவால் பத்துவிரலும் மைபூசியது மறக்குமோ?
*மிதித்தாலும் சுமக்கின்றது
  சைககிள்!
*நதியை பெண்ணென்று வைத்தது
 அதன் துகில் உரித்திடத்தானோ
 மணல்கொள்ளையர்களே?
*அன்பே நம் காதலில் எதிரிகள் யாருமில்லை
 என்றிருந்தேன் நீயே எதிரியாவாய் என்றறியாமல்!
*வெள்ளை எறும்புகள்
 ஒன்றன் பின் ஒன்றாக
 சாலையின் நடுவே கோடுகள்!
*கண்ணீரை சிந்தியபடி செல்கின்றன
 தாயை பிரிந்த சோகத்தில்
 ஆற்றின் குழந்தைகள் மணல் லாரிகளில்!

Sunday, June 2, 2013

ஆழி மழையும் அம்மாவின் மிக்ஸியும்




“அழிமழைக்கண்ணா ஒன்றும் நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்தேறி
ஊழி முதல்வனுருவம் போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
அழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலொரெம்பாவாய்”

இது திருப்பாவை என்னும் நூலில் உள்ள பழைய தமிழ்ப்பாடலாகும்.  இந்தப் பாடலில் கடலிருந்து நீர் முகரப்பட்டு மேலே சென்று மேகமாய் மாறி மழையாய் பொழிகின்றது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.  இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கடலிலிருந்து நீர் ஆவியாகி மேகமாய் மாறி மழையாய் பொழிவதை நவீன அறிவியல் உலகம் அறிந்து கொள்வதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் அறிந்து வைத்துள்ளான் என்று புரிகின்றது.  இலக்கியத்தில் மட்டுமல்ல விஞ்ஞானத்திலும் தமிழன் சிறந்து விளங்கினான்……..

மீண்டும்  மீண்டும் மனப்பாடம் செய்து கொண்டிருந்த தங்கம் இடையிடையே தன் தாய் பேச்சியம்மாளின் முகத்தை கவனித்துக் கொண்டாள்.

பேச்சியம்மாள். மெலிந்த தேகத்தில் முப்பது வயதக்குரிய இளமையின் வனப்புகள் ஏதுமில்லை.  இரண்டு தேங்காய்த் துண்டுகள் இரண்டு வற்றல் கொஞ்சம் உப்பு சேர்த்து அம்மியில் வைத்து நசுக்கிக் கொண்டிருந்தாள்.  மதிய உணவுக்கு துவையலும் ரசமும் தான்.

“அம்மா” மெதுவாக ஆரம்பித்தார் தங்கம் “என்னடி?”  

“திங்கட்கிழமைக்குள்ள எப்படியாவது வாங்கித் தந்துருவியா?”

“இவ ஒரு புளுபுளுத்தா! நாலு நாளா என் ஆவிய போட்டு எடுத்துக்கிட்டே இருக்கா! நாந்தான் வாங்கித்தாரேன்னு சொல்லிட்டன்லா? பேசாம இரியேன்”

“அது இல்லம்மா திங்கக்கிழமை சாநய்திரம் எங்க ஸ்கூல்ல ஆண்டு விழா.  ஆதில நா மேடையேறி பேசப் போறேன் அதுக்காவது போட்டு போவணும்னு ஆசயா இருக்கும்மா”

“இங்க பாரு முத்தய்யா அண்ணாச்சி சாயத்திரம் ரூபாய் கொண்டு வாரேன்னுருக்காரு நாளக்கி காலயில மொத வேலயா கொலுசுக்கடக்கி போயி வாங்கித்தந்துருதேன்”

“அம்மா நாளக்கி ஞாயிற்றுக்கிழமை நம்ம ஊரு கொலுசுக்கட லீவு. அவுங்க வேதம்லா?”

“நம்ம ஊருல இல்லன்னா என்ன? ஏரலுக்கு போயி வாங்கித் தாரேன்”.

“சரிம்மா” சந்தோசமாக கூறிவிட்டு விளையாட வெளியே சென்றாள் தங்கம்.  பேச்சியம்மாளுக்கு ஆற்றாமையால் நெஞ்சு முட்டிக் கொண்டு வந்தது.  சின்னபிள்ளை அதுக்கு என்ன தெரியும் பாவம் கூட படிக்கிற புள்ளைங்கல்லாம் கம்மல்ää கொலுசு போட்டு அழவு காமிக்கும் போது இவளுக்கும் ஆசை வரத்தானே செய்யும். ஆவ அப்பன் கோபாலு ஒரு குடிகாரப்பய அவன் ஒரு நாள் வேலபாத்துட்டு வந்தா ஒம்பது நாள் குடிச்சிட்டு கெடப்பான்.  அவனால ஒரு பிரயோசனுமும் இல்ல நான்தான் நாலு எடத்துல வேலபார்த்து கதய ஓட்டுதேன். நானும் நாளு மாசமா ஒரு கொலுசு வாங்கி குடுத்திரனும்னு நெனச்சிட்டுதானிருக்கேன்! முயடியல! ஓவ்வொரு செலவா வந்திருது.  சித்திர மாசம் கோயில் கொட.  அதுக்கு ஒரு பாடு செலவு.  வைகாசியில அண்ண மகா உக்காந்துட்டா! அதுக்கு சீரு செனத்தியின்னு ஏகமா ஆச்சுää போன மாசம் புருசனுக்கு உடம்பு சரியில்லாம போச்சுää அது குடியால வந்த கொழுத்துப் போன செலவு. ஓவ்வொண்ணுக்கும் சிட்ட வாங்கித்தான் சமாளிக்கேன். மேலத்தெரு பாலு அண்ணாச்சிதான் தருவாரு. இரண்டாயிரத்துக்கு நானூறு புடிச்சிக்கிட்டு ஆயிரத்து அருநூறு வாங்கினா நூறு நாள் இருபது ரூபாய் கட்டணும்.  இப்பவே மூணு சிட்ட ஓடுது.  இந்த நெலமயில கொலுசு வாங்க பணத்துக்கு எங்க போவேன் வேற வழயில்லாமத்தான் முத்தையா அண்ணாச்சி சொன்ன யோசனய கேட்டேன்.  தனக்குள் புலம்பியபடியே சோறு வடித்து இறக்கினாள்.  அரசு அறிவித்த இலவச பொருட்களான மிக்ஸியும்ää பேனும் சென்ற வாரம் தான் அந்த தெருவில் விநியோகிக்கப்பட்டது.  பேச்சியம்மாளுக்கும் கிடைத்தது.  அதை பயன்படுத்தாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருந்தாள்.  நான்கு நாள் முன்பு சாத்தான்குளத்திலிருந்து அவளுடைய பெரியப்பா மகன் முத்தையா அவள் வீட்டிற்கு வந்த போது.

“மிக்ஸியும் ஃபேனும் சும்மாவா கெடக்கு வேணும்னா வெலக்கி குருத்துருவமா?” என்று கேட்டார்.  

“ஏன் அண்ணாச்சி அரசாங்கம் இலவலசமாக குடத்த இதயுமா வெலக்கி விக்காக?

“என்னம்மா நீ  பேசுத?

“போன தடவ இலவச டி.வி பட்டபாடு ஓனக்கு தெரியாதாங்கும்! அதே நெலமதான் இதுக்கும்! யோசிச்சு சொல்லு! ரெண்டும் சேத்து ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு போவும்.  நானே வித்து தாரேன்”      

பேச்சியம்மாளும் யோசித்து பார்த்தாள் ஏற்கனவே ஃபேன் வீட்டில் இருக்கிறது.  மிக்ஸிய ப்ளக்கில் மாட்டி அரைப்பதற்குள்ää அம்மியில் வைத்து ரெண்டு இழுப்பு இழுத்து விடலாம்.  இந்த ஆயிரத்து ஐநூறு கிடைத்தால் மகளுக்கு கொலுசு வாங்கி கொடுத்து விடலாம்.

“சரி அண்ணாச்சி நீங்களே வித்துக்குடுங்க” என்றாள். உடனே இரண்டு பொருட்களையும் எடுத்துக் கொண்டு சனிக்கிழமை பணத்துடன் வருவதாக சென்றான் முத்தையா.

மாலை வேளை முத்தையா பணத்தை கொண்டு தந்தார்.  அதை வாங்கி வைத்த பின்புதான் அப்பாடா கொலுசு பிரச்சினை தீர்ந்தது என்று நிம்மதி அடைந்தாள்.

மறுநாள் காலை விறுவிறுவென்று வேலைகளை முடித்தாள்.  பத்தரை மணி ஏரல் செல்லும் பஸ்சை பிடித்தால் கொலுசு வாங்கிவிட்டு மதியம் திரும்பிவிடலாம் என்று வேகமாகக் கிளம்பினாள்.
பணத்தை எடுக்க பணம் வைத்திருந்த டப்பாவிற்குள் கைவிட்டபோது பகீரென்றது.  டப்பா வெறுமையாயிருந்து.

“அடப்பாவி மனுசா புள்ளாக்கி கொலுசு வாங்க வெச்சிருந்த பணத்தையா எடுத்த? ஆத்திரம் பொங்கியது.  துக்கம் தொண்டையை அடைத்தது.  நேற்று இரவு கோபால் முழுபோதையுடன் வந்துபோது கூட சந்தேப்படவில்லை. மிகஸியையும் ஃபேனையும் விற்று கொலுசு வாங்க பணம் வைத்திருப்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும் மகள் விசயத்தில் விளையாட மாட்டான் என்று நினைத்தாள்.  மகள் ஆசையோடு இருப்பாளே! அவளிடம் என்ன பதில் சொல்வது கொலுசு கிடைக்காது என்று தெரிந்தால் தாங்கமாட்டாளே.  

மனதில் துயரம் பொங்க அழுது அரற்றினாள்.

சிறிது நேரத்தில் போதையுடன் வீட்டிற்கு வந்தான் கோபால்

ஆவேசத்துடன் பாய்ந்து சட்டையை பிடித்து உலுக்கினாள்.

“நீயெல்லாம் ஒரு மனுசனா?” “பெத்த புள்ளக்கி ஒரு கொலுசு வாங்கித்தர வக்கில்ல. நான் கஷ்டப்பட்டு கொஞ்சம் பணம் ரெடி பண்ணி வெச்சிருக்கேன். அத எடுத்துட்டு போயி குடிச்சிட்டு வந்திருக்கியே நீயெல்லாம் வெளங்குவியா?”

“ஏ செத்த மூதி கைய எடுடி”

மனைவியின் கையை உதறினான்.

“ஏன் இந்த நெல நிக்க? என்னமோ கஷ்டப்பட்டு ஒழச்சு சேத்து வச்சிருந்த பணத்த எடுத்த மாதிரி இந்த குதி குதிக்க? இந்த பணம் எப்படி வந்தது சொல்லுடி”

“இலவச மிக்ஸிää ஃபேன் வித்து வாங்கி வெச்சிருக்கேன்”

“அப்படிச் சொல்லு! இலவச மிகஸியும்ää ஃபேனும் அரசாங்கம் குடுக்குதே! அதுக்கு பணம் எப்படி வருது? நோட்டு அச்சடிச்சா?”

“பொறவு?”

“அடிப்போடி கூறுகெட்டவளே.  நாங்க எல்லாம் கஷ்டப்பட்டு குடிக்கிறதால வர்ற வருமானத்த வெச்சு தாண்டிää அரசாங்கம் இலவசங்கள தருது.  கடல்லேருந்து ஆவியாவற தண்ணி மேகமா மாறி நெலத்துல பெய்யுது.  அது ஆறா ஓடி வருது.  அரசாங்கம் கடல் மாதிரி நாங்கல்லாம் ஆறு மாதிரி.  அந்த கடலுக்கே தண்ணியை குடுக்கறதே நாங்க தான்! இது புரியாம கத்தறே போவியா?        

தத்துவத்தை உதிர்ந்துவிட்டு கட்டிலில் சாய்ந்தான் கோபால்.

அடுத்த வீட்டில் தன் தோழியிடம் தான் மனப்பாடம் செய்த கட்டுரைய ஒப்பித்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள் தங்கம்.

ஆழி மழைக்கண்ணா ஒன்றும் நீ கைகரவேல்………..




Saturday, June 1, 2013

முரண்சுவை தங்கநகை உற்பத்தி




பல வருடங்களுக்கு முன்பு முரண் சுவை என்ற தலைப்பில் நடிகர் ராஜேஷ் ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார்.

கால மாற்றத்தால் நடைமுறை பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் தொழில் நுப்பங்கள் எப்படி முரணாகிப் போகின்றன என்பதே அந்த கட்டுரைகளின் கரு.

அதே பாணியில் நான் தொடர்ந்து எழுதாலாம் என்று எண்ணி இந்த பகுதியை ஆரம்பிக்கிறேன்.

முதலில் தங்க நகை உற்பத்தியில் ஏற்பட்ட ஒரு முரண்.

முன்பெல்லாம் தங்க நகைப்பட்டறைகளில் மற்ற உலோகங்களை மிகவும் கவனமாக கையாள்வாhக்ள்.  ஏனெற்றால் தப்பித்தவறி தங்கத்தில் மற்ற உலோகங்கள் கலந்து விட்டால் அதன் தரம் குறைந்து விடும் வாய்ப்பு உண்டு.  மற்றொரு விசயம் மற்ற உலோகங்கள் கலந்து விடும்போது அதன் உருகும் வெப்பநிலை குறைந்து விடும்.  குறி;ப்பிட்ட வடிவம் உருவான பின்பு காய வைக்கும் போது உருகிவிட வாய்ப்பு உண்டு.

வேலை கற்றுக் கொள்ளும் இளைஞர்கள் செம்பு அல்லது வெள்ளியிலோ தான் செய்து பார்த்து பழக வேண்டும்.  எனவே அவர்கள் வேலை குறைவான நேரம் முதலாளி ஊரில் இல்லாத சமயம் பார்த்து பழகுவார்கள்.

இருந்தாலும் செம்பு வெள்ளி ஆகிய உலோகங்கள் இல்லாமல் நகை செய்ய முடியாது. ஆனால் அதை தேவைப்படும் நேரத்தில் எடுத்து பயன்படுத்திவிட்டு பத்திரப்படுத்து விடுவார்கள்.

தேவைப்படும் உலோகங்களே இப்படி என்றால் ஈயம் போன்ற உலோகங்கள் (அலுமினியம்ää வெள்ளியம் காரியம்ää பித்தளை) அண்டவே விடுவதில்லை.  தங்கத்தோடு அவை பட நேர்ந்தால் நீர்த்தப்பட்ட கந்தக அமிலம் (சல்ப்பூரிக் ஆசிட்) புளிகரைசல் ஆகிய வற்றில் நன்கு கழுவி விடுவது வழக்கம்.

இப்படி ஒதுக்கிவைகப்பட்ட பிற உலோகங்கள் காலமாற்றத்தால் தற்போது தங்க நகைகளை தரம் உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

இதை அறிந்து கொள்ள தங்க நகைகளை பற்ற வைக்கும் நுட்பம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

கலப்பு உலோகங்கள் தனித்த உலேகத்தை விட உருகுநிலை குறைவு என்று பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம். தங்க நகைகள் பற்ற வைக்க தங்கத்தை விட உருகுநிலை குறைந்த கலப்பு உலோகம் தேவை அதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டது தங்கம் செம்பு வெள்ளி கலவை ஆகும்.  இந்த கலவையில் 20% முதல் 30%வரை செம்பு வெள்ளி சேர்த்தால் தான் உருகி வேலை செய்வதற்கு எளிதாக இருக்கும்.  சமீப காலம் வரை இந்த முறையே பயன்படுத்தப்பட்டது. எனவே இந்த முறையால் செய்த நகைகளை பழசாகின பின் உருக்கும் போது அதில் பற்ற வைக்க பயன்பட்ட கலப்பு உலோகத்தில் உள்ள செம்புää வெள்ளி ஆகியவை சேர்ந்து உருகி அதனுடைய தரத்தில் 1%முதல் 10% வரை குறைவு ஏற்படும்.எனவே தான் பழைய தங்க நகைகள் உருக்கி நகைகள் செய்தால் மச்சம் குறைந்து விடும் என்று சொல்வார்கள்.

நவீன முறையில் பற்ற வைக்க பயன்படுத்தும் கலப்பு உலேகத்தில் செம்பு வெள்ளிக்கு பதிலாக கேடியம்,சிங் போன்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றது.  இந்த முறையால் தங்கத்தோடு மேற்கண்ட உலோகங்கள் 9மூ முதல் 10மூ வரை மட்டும் சேர்க்கப்படுகின்றன.  அதிலும் கேடியம் பற்ற வைக்கும் நேரத்தியே பாதியளவு ஆவியாகி விடும்.  எனவே இந்த முறையில் செய்யப்படும் நகைகள் உருக்கப்படும் படும் போது தரம் (மச்சம்) குறைவதில்லை 916  hallmark நகைகள் இவ்விதம் செய்யப்படுகின்றன.

இப்படி எது தரத்தை குறைத்துவிடும் என்று ஒதுக்கி வைத்தார்களே அதுவே தரத்தை உயர்த்துவதினாலும் தரத்தை நிர்ணயிப்பதினால் பங்காற்றுகின்றன என்பது முரணான சுவையான நிகழ்வல்லவா?

    

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.