Monday, July 28, 2014

குறுங்கவிதைகள் பகுதி 2

விரைந்து செல்லும் காரை
துரத்திப்பிடிக்க முயன்று
தோற்கும் சருகுகள்!

எத்தனை வர்ணனைகள்
எத்தனை கவிதைகள்
கொடுத்து வைத்த நிலா!

உனக்கும் எனக்கும் 
சற்றிடைவெளி வேண்டும் என்கிறாய்!
எனக்கோ உன் சிற்றிடைவெளி
எப்போதும் வேண்டும் என்கிறேன்!

புதுக்கதை எழுத
தனியாய்ப்போன இடத்தில் 
கிடைத்த புதுக்கவிதை நீ!

ஒற்றைநாள் வாழ்க்கை
கொண்டாடி மகிழும் 
ஈசல்கள்!

சில நேரம் நான் எழுதுவது
எனக்காக அல்ல!
பேனாவின் முத்தத்திற்காக
ஏங்கிக்கிடக்கும்
காகிதங்களுக்காக!

வயல்களின் தாலிகள்
அறுக்கப்படுகின்றன
புது மனைகளுக்காக!

மனிதர்களின் விருப்பத்திற்காகவே
பழங்களில் பாதியை
விட்டுவைக்கின்றன
அணில்கள்!

சொற்குற்றங்களும்
பொருட்குற்றங்களுமே
ரசிக்கப்படுகின்றன
மழலைகள் உலகில்!

கூட்டத்தோடு குடிக்கும்
நண்பர்கூட்டம்
குடித்து குடித்து
குடல் வெந்து
இறந்த நண்பனின்
அடக்கத்திற்கு பின்!

ஏக்கத்தோடு பார்க்கிறான் சிறுவன் போண்டாவை!
சிகரெட் வாங்க தந்தை தந்த சில்லறையோடு!

கையொடிந்தும் விரிசல் விழுந்தும்
நாறகாலிகள் நான்கு! 
இரு செங்கற்களை காலுக்கு 
முட்டுக்கொடுத்த பெஞ்சு ஒன்று!
நைந்த சேலையை வியர்வை 
நனைக்க அவிக்கும் பெண்! 
பரிமாறும் கணவன்! 
சாக்கடை கொசுக்கள் கடிக்க 
வாகனப்புகை சுவாசித்து 
சிறுதுண்டில் உறங்கும் குழந்தை! 
உள்ளே இறங்கவில்லை இட்லி!

டிஷ் ஆண்டனாக்கள்!

மழையே போ எனகின்றன
வீடுதோறும் மொட்டைமாடியில்
திருப்பி வைக்கப்பட்ட குடைகள்!

தான் எதையும் வறுக்காமல்
தானே வெயிலில் வறுபடும்
வாணலிகள்!

புதியபுதிய சேனல்களுக்காக
வானத்தைக் கையேந்தும்
திருவோடுகள்! 


Friday, June 6, 2014

நீரில்லாத மேகம்

                                                       எழுதியவர் தா. ராசாமணி
வாழ்க்கை முட்டாளால் சொல்லப்பட்ட ஒருகதைசேக்ஸ்பியர்.
திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே உள்ளது அந்தச் சிறிய இரயில் நிலையம்.
இரயில்வே நிலையத்தின் வெளியே அழகியத் தோட்டம். எப்பொழுதும் நிழல் கொடுக்கும் உயர்ந்த மரங்கள்.. அந்த மரங்களை ஒட்டி சில சிமெண்ட் பெஞ்சுகள்!
மாலை நேரத்தில பதவியிலிருந்து ஒய்வுப்பெற்ற வயோதிக நண்பர்களுக்கு அந்த சிமெண்ட பெஞ்சுதான் சிம்மாசனங்கள். தினசரி மாலை ஐந்து மணிக்கு அவர்கள் வந்துவிட்டால் அந்த இடம் கலகலத்துப் போய்விடும். அரட்டைகள்! மலரும் நினைவுகள்! விவாதங்கள்! இலக்கியம்! அரசியல்! அங்கு அலசப்படும். வயோதிகத்தை கவலைகளை மறந்து அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை பயணிகளும் அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் ரசிப்பார்கள்.
பேராசிரியர் காசிராசன் தனது கர்ச்சிப்பால் சிமெண்ட் பலகையை துடைத்துவிட்டு அமர்ந்தார். அவர் அருகில் ஜெ.கே.ஆர். (தங்களுடைய நீண்ட பெயர்களை சுருக்கி தங்கள் பெயர்களை அவர்களே ஞானஸ்நானம் செய்து கொள்வார்கள்) ஒவ்வொரு நண்பர்களும் அவர்களோடு வந்து இணைந்துக் கொண்டனர்.
பம்பாயில் பயங்கர மத கலவரமாம் பலர் கொல்லப்பட்டனர். என டிவியில் செய்தி ஒளிபரப்பப்பட்டதுபேராசிரியர் மெதுவாக விவாதத்தை ஆரம்பித்தார்.
அட அட…” விஜயராஜி சார் வருத்தம் தெரிவித்தார். அவர் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் தலைமை ஆசிரியராய் இருந்தவர்.
எனக்கு என்னத் தோணுதுனா அந்த எல்லா மத கடவுள்களும் நேரடியாக ஒருவருக்கொருவர் சன்டைப்போட்டுக் கொள்ளலாம்! கொஞசம் கற்பனை செய்து பாருங்கள் ஒரு கடவுள் வேல் கொண்டு வருவார் இன்னொரு கடவுள் கடாயுதம் கொண்டு வருவார் எதிர் அணியில் இன்னொரு மத கடவுள் நீண்ட வாள் கொண்டு வருவார் இப்படி கடவுள்கள் சண்டைப் போடடுக் கொண்டால் பார்க்க பரவசமாக இருக்கும். ஆனால் அப்பாவி பக்தர்களை ஏவிவிட்டு சண்டை போடவிட்டு அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தெய்வங்கள்.!  தமிழாசிரியர் மெல்ல தனது நாhத்திக கொள்கையை பரப்ப ஆரம்பித்தார்.
கடவுள் யாரையும் சண்டைப் போட சொல்லவில்லை. பக்தர்கள்தான் தங்கள் சொந்த இலாபத்திற்காக தேவையில்லாமல் சண்டை போடடுக் கொண்டால் கடவுள் என்ன செய்வார்? தபால் நிலைய அதிகாரியாக இருந்த சுவர்ணமானிக்கம் சார் சொன்னார்.
இப்படி மதச் சண்டைப் போடுபவர்களுக்கு உண்மையிலே தங்கள் மதக் கொள்கைகளோ. தத்துவங்களோ தெரியாது. இப்படி மதச்சண்டைப் போட்டால் தங்கள் கடவுள் தங்களை ஆசீர்வதிப்பார் என்ற தவறான எண்ணம் கொண்டு இருக்கிறார்கள்…” ஒய்வு பெற்ற மின்துறை அதிகாரி ஸ்டிபன் சார் சொன்னார்.
கடவுள் உண்டு என்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மிக அருமையாக சொல்லியிருக்கிறார். நம்ம நாட்டுக்கு மத நம்பிக்கை அவசியமில்லை மனித அன்புதான் தேவை. அது தான் மனித சமுதாயத்தை முன்னேறச் செய்யும்…” சமர்தர்மக் கொள்கை அடிப்படையில் கூறினார் எழுத்தாளர் பெருமாள் இவர் இரண்டு கதை தொகுப்பினை வெளியிட்டவர். அன்பானவர் அனைவரையும் குறிப்பாக அந்த முதியவர் கூட்டத்தை தன் எழுத்து வல்லமையினால் கட்டிப் போட்டவர்.
இதுவரை அமைதியாக இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஒரு புதியவர்.“நான் கூட சார் சொன்னதை ஆதரிக்கிறேன் இன்று மனிதநேயம் தான் அவசியம். மதங்கள் மீது கொண்ட வெறியல்ல…”
அனைவரும் அந்த புதியவரை பார்த்தனர் ஐயம் சாரி என்னுடைய பெயர் மாசில்லாமணி மனதத்துவ பேராசிரியர் திருச்சியில் மனநல மருத்துவமனை நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த ஊரில் திருமதி. ஞானம் கோவில்பிள்ளை என்பவர் என் சொந்த சகோதரி.
அவங்க மகளுக்கு நாளைக்கு கல்யாணம் அதுக்hக வந்திருக்கிறேன்..டாக்டர் மாசில்லாமணி தன்னைப் பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பேசிக் கொண்டிருந்தவர்களை இடித்துக்கொண்டு வந்தாள் ஒரு பெண். அவளுடைய இடுப்பில் தண்ணீர் நிறைந்த பிளாஸ்டிக் குடம் யாரிடமும் எதுவும் பேசாமல் குடத்திலிருந்த தண்ணீரை அங்கிருந்த செடிகளுக்கு ஊற்றினாள்.
பார்க்க முப்பது வயதிருக்கும் சற்று கருத்தமேனி கடமையை செய்யும் வெறிஎன்ன கமலா செடிகளுக்கு மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற வந்தாயா?” பேராசிரியர் காசிராசன் கேட்டார்.
ஆமாம் என்பது போல் தலையசைத்துவிட்டு எதுவும் நடக்காததுபோல் மீண்டும் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றாள்.
யார் இந்த பெண்? இப்படி இன்டிசன்டாக நடந்து கொள்கிறாள்?” டாக்டர் மாசில்லாமணி கேட்டார்.
இந்த பெண். கொஞ்சம் பைத்தியம் என்னுடைய பழைய மாணவி. கமலா. அது ஒரு கதை டாக்டர். பேராசிரியர் கவலையோடு அணைவரையும் பார்த்துவிட்டுக் தொடர்ந்தார்.
நான் பணியாற்றிய கல்லூரியில் கமலா பைனல் இயர் படித்துக் கொண்டிருந்தாள். ஒழுக்கமான பெண் அவளை ஒரு தலையாக ரவி என்ற மாணவன் காதலித்திருக்கிறான். ஒரு நாள் வரம்புமீறி அவளிடம் ஏதோ சேட்டை செய்திருக்கிறான். அவள் அவனுடைய கன்னத்தில் ஒங்கி அடித்துவிட்டுஇனி என்னிடம் தவறாக நடந்தால் நடப்பது வேறு…” என எச்சரித்திருக்கிறாள்…”
அடடா ஒரு நாவல் படிப்பதுபோல் இருக்கிறது சார். மேலே சொல்லுங்கள் என ஊக்கப்படுத்தினார் டாக்டர்.
சேக்ஸ்பியர் சொன்துபோல் வாழ்க்கையே ஒரு முட்டாளால் சொல்லப்பட்ட கதை தானே! டாக்டர்! கமலா மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதியதும் அவளுடைய விதவை தாய் அவளுக்கு திருமணம் பண்ணி வைத்தாள். மணமகன் மாணிக்கம் திருநெல்வேலியில் ஒரு கம்பெனியில் அக்கௌன்டராக வேலைப் பார்த்துக் பொண்டிருந்தான். தினமும் இங்கிருந்து இரயிலில் தான் வேலைக்குச் சென்று வருவான். மணவாழ்வு மிக இனிமையாக போய்க் கொண்டிருந்தது ஆனால் ஒருநாள்…”
ஒருநாள் பிளிஸ் தொடர்ந்து கதையைச் சொல்லுங்க தலைமை ஆசிரியர் விஜயராஜ் சொன்னார்.
கமலாவின் கணவர் ஒருநாள் காலைப் பணிக்காக இரயிலில் பயணிக்கும்பொழுது அடுத்த ஸ்டேசனில் இரயில் நின்றது. ஒரு வாலிபன் பெட்டி படுக்கையோடு ஏறி மாணிக்கம் அருகில் அமர்ந்தான்.
சார் திருநெல்வேலியில் இறங்கி உடனே அடுத்த இரயில் பிடித்து பம்பாய் போகணும். சார் நான் என்னுடைய மடிக்கணினியைப் பார்த்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்காதே? எனச் சொன்னவன். தன் மடிக்கணினியை இயக்க ஆரம்பித்தான். மாணிக்கத்தின் பார்வை அந்த மடிக்கணினி மீது பாய்ந்தது.
அதில் நிச்சயமாக அவளோடு படித்த ரவிதானே! சரியா?” எழுத்தாளர் பெருமாள் மகிழ்ச்சியுடன் கூறினார்.
கரெட். அது ரவிதான் ஊரைவிட்டு போகிறவன் மாணிக்கத்தைப் பார்த்ததும் அந்தப் பெட்டியில் ஏறி கமலாவை பழிக்கு பழிவாங்க ஏற்கனவே செயற்கையாக கிராபிக்ஸ் உதவியுடன் ரவியும் கமலாவும் காதல் திருவிளையாடல் செய்வதுப்போல் மடிக்கணினியில் பதிய வைத்திருந்தான்.
அவமானம் அவனை வாட்டியது. வேதனை அவனை விரட்டியது: அவனால் பேச முடியவில்லை. சிந்தனை அவமான சிறையில் சிறைபிடிக்கப்பட்டது. அந்த மடிக்கணினியை பார்த்ததிலிருந்து சிலையாக நின்றான். கமலா ஏற்கெனவே கற்பிழந்தவளா?
அன்றிலிருந்து மாணிக்கம் கமலாவிடம் பேசுவதில்லை.. காரணம் கேட்டு எத்தனையோ முறை கண்ணீர் விட்டிருக்கிறாள் பதிலில்லை!
மகளின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பிளவு கமலாவின் தாயார் இதயத்தை தாக்கியது. அந்த கைம்பெண் எந்த விடையும் தெரியாமல் மாரடைப்பில் இறந்தாள்.
இப்பொழுது கமலா தனிமரம்!
மாணிக்கம் எதையும் சீர்தூக்கி பார்க்க தெரியாதவன். உள்ளத்தில் வரட்டு கௌரவமும் பழிவாங்கும் உணர்ச்சியும் உடையவன்.
கமலாமீது கொண்ட வெறுப்பு அவனை இன்னொரு பெண்ணை மனைவி ஸ்தானத்தில் கொண்டு வரச் செய்தது.
அதைக் கண்ட கமலாவின் மனம் பேதலிக்க ஆரம்பித்தது. வறுமைää ஆதரவு இன்மை செய்யாத குற்றத்திற்கு தண்டனை அவளை பைத்தியமாக்கியது.
ஆமாம் ஏன் இவள் செடிகளுக்கு மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறாள்? டாக்டர் வினவினார்.
அதற்கு நான் தான் காரணம்.. நான் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது சமூக சேவைக்காக மாணவிகளை அழைத்துச் சென்று மரக்கன்றுகளை நடச்செய்து தண்ணீர் ஊற்றச் செய்வேன் கமலா என் மாணவியாக இருந்ததால் இப்பொழுதும் மனநோய் பிடித்திருந்தாலும் அதே சமூகப்பணியை செய்கிறாள்…” என்றார் தமிழாசிரியர் ராசன்.
சரி இப்போது இந்த பெண்ணுக்கு சாப்பாடு தங்குமிடம் யார் கவணிக்கிறார்கள்…” டாக்டர் வினவினார்.
நாங்கள் தான் பரிதாபப்பட்டு அதோ அந்த சர்ச் கன்னியாஸ்திரிகளிடம் இவளுடைய சோக கதையைச் சொல்லி இவளுக்கு புகலிடம் ஏற்படுத்தினோம்…” என ஸ்டிபன் சார் பதிலளித்தார்.
அதுவரை அமைதி காத்த ஜெ.கே.ஆர் டாக்டரைப் பார்த்து டாக்டர் ஒரு உதவி இந்த பெண்ணை உங்கள் மருத்துமனையில் சேர்த்து குனமாக்க முடியுமா..? நாங்கள் சிகிச்சைக்கான பணத்தை தந்து விடுகிறோம்.” என்றார்.
தூரத்தில் இரயில் வரும் சத்தம் கேட்டது அதுவரை சோகமாக இருந்த கமலாவின் முகம் மலர்ந்தது. தன் கூந்தலையும் உடையையும் சரி செய்துக் கொண்டு ரயில் நிலையத்திலிருந்த தூனுக்கு பின் ஒளிந்துக் கொண்டு இரயில் வண்டியிலிருந்து வெளியே வருபவர்களை கவனிக்க தயாரானாள்.
பேராசிரியர் சார் இதுக்கு என்ன அர்த்தம்?” – டாக்டர் கேட்டார்.
இவளுடைய கணவன் திருநெல்வேலியில் வேலைப் பார்க்கிறான். தினசரி இந்த இரயில் தான் வருவான் அவனைப் பார்க்கத்தான் இந்த ஏற்பாடு…”
இரயில் ஸ்டேசனை வந்தடைந்தது. பயனிகள் இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர்.
கமலாவின் கண்கள் அவளுடைய கணவன் மாணிக்கத்தை தேடின. அவனைக் கண்டதும் அவள் முகத்தில் புன்னகை! முகம் பிரகாசமடைந்தது.
டாக்டர் மாசில்லாமணி ஜெ.கே.ஆரை பார்த்தார்.
இவளுக்கு என்னால் சிகிச்சை கொடுக்க முடியாது.
ஏன் டாக்டர்…” அங்கிருந்த வயோதிக வாலிபர்கள் கேட்டார்கள்.
டாக்டர் மிக தீர்க்கமாக கூறினார்.
இவளுக்கு சிகிச்சை அளித்து குணமாக்கினால் இவளுக்கு இன்னும் அதிக சிக்கல்கள் உண்டாகும். முதலாவது இவளுடைய கணவன் இவளை ஏற்றுக் கொள்ளமாட்டான். இப்பொழுது பாதுகாப்பாக தங்க இடமும் உணவும் கிடைக்கின்றன. அவளுக்கு ஆதரவாக கன்னியாஸ்திரிகள் இருக்கிறார்கள். தினசரி தன் கணவனைப் பார்த்து அவள் மனம் பரவசமாகிறது. உங்களுடைய அன்பான கவனமும் போய்விடும். எனவே இவள் இப்படி மனநோயோடு இருப்பதுதான் அவளுக்கு நல்லது என்றார் மனநலமருத்துவர்.
சிந்தித்துப் பார்க்கும்போது மற்றவர்களுக்கும் அதுவே சரியாகப்பட்டது.
டாக்டரின் வார்த்தையை ஆமோதித்த அனைவரது பார்வைகளும் அந்தப் பெண்ணை நோக்கித் திரும்பியது.
அவள் மறுபடியும் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்திருந்தாள்.

தொடர்ந்து ஊற்றிக் கொண்டிருப்பாள்.
            ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியரான எனது நண்பர் திரு  தா. ராசாமணி அவர்களுக்கு தமிழ்ச்சிறுகதைகள் எழுதுவதில் அலாதிப்பிரியம்.புதியத்தென்றல் என்ற இதழில் வெளிவந்த இந்தக்கதையே நட்புக்காக எனது தளத்தில் வெளியிடுகிறேன்.

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.