Sunday, June 2, 2013

ஆழி மழையும் அம்மாவின் மிக்ஸியும்




“அழிமழைக்கண்ணா ஒன்றும் நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்தேறி
ஊழி முதல்வனுருவம் போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
அழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலொரெம்பாவாய்”

இது திருப்பாவை என்னும் நூலில் உள்ள பழைய தமிழ்ப்பாடலாகும்.  இந்தப் பாடலில் கடலிருந்து நீர் முகரப்பட்டு மேலே சென்று மேகமாய் மாறி மழையாய் பொழிகின்றது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.  இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கடலிலிருந்து நீர் ஆவியாகி மேகமாய் மாறி மழையாய் பொழிவதை நவீன அறிவியல் உலகம் அறிந்து கொள்வதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் அறிந்து வைத்துள்ளான் என்று புரிகின்றது.  இலக்கியத்தில் மட்டுமல்ல விஞ்ஞானத்திலும் தமிழன் சிறந்து விளங்கினான்……..

மீண்டும்  மீண்டும் மனப்பாடம் செய்து கொண்டிருந்த தங்கம் இடையிடையே தன் தாய் பேச்சியம்மாளின் முகத்தை கவனித்துக் கொண்டாள்.

பேச்சியம்மாள். மெலிந்த தேகத்தில் முப்பது வயதக்குரிய இளமையின் வனப்புகள் ஏதுமில்லை.  இரண்டு தேங்காய்த் துண்டுகள் இரண்டு வற்றல் கொஞ்சம் உப்பு சேர்த்து அம்மியில் வைத்து நசுக்கிக் கொண்டிருந்தாள்.  மதிய உணவுக்கு துவையலும் ரசமும் தான்.

“அம்மா” மெதுவாக ஆரம்பித்தார் தங்கம் “என்னடி?”  

“திங்கட்கிழமைக்குள்ள எப்படியாவது வாங்கித் தந்துருவியா?”

“இவ ஒரு புளுபுளுத்தா! நாலு நாளா என் ஆவிய போட்டு எடுத்துக்கிட்டே இருக்கா! நாந்தான் வாங்கித்தாரேன்னு சொல்லிட்டன்லா? பேசாம இரியேன்”

“அது இல்லம்மா திங்கக்கிழமை சாநய்திரம் எங்க ஸ்கூல்ல ஆண்டு விழா.  ஆதில நா மேடையேறி பேசப் போறேன் அதுக்காவது போட்டு போவணும்னு ஆசயா இருக்கும்மா”

“இங்க பாரு முத்தய்யா அண்ணாச்சி சாயத்திரம் ரூபாய் கொண்டு வாரேன்னுருக்காரு நாளக்கி காலயில மொத வேலயா கொலுசுக்கடக்கி போயி வாங்கித்தந்துருதேன்”

“அம்மா நாளக்கி ஞாயிற்றுக்கிழமை நம்ம ஊரு கொலுசுக்கட லீவு. அவுங்க வேதம்லா?”

“நம்ம ஊருல இல்லன்னா என்ன? ஏரலுக்கு போயி வாங்கித் தாரேன்”.

“சரிம்மா” சந்தோசமாக கூறிவிட்டு விளையாட வெளியே சென்றாள் தங்கம்.  பேச்சியம்மாளுக்கு ஆற்றாமையால் நெஞ்சு முட்டிக் கொண்டு வந்தது.  சின்னபிள்ளை அதுக்கு என்ன தெரியும் பாவம் கூட படிக்கிற புள்ளைங்கல்லாம் கம்மல்ää கொலுசு போட்டு அழவு காமிக்கும் போது இவளுக்கும் ஆசை வரத்தானே செய்யும். ஆவ அப்பன் கோபாலு ஒரு குடிகாரப்பய அவன் ஒரு நாள் வேலபாத்துட்டு வந்தா ஒம்பது நாள் குடிச்சிட்டு கெடப்பான்.  அவனால ஒரு பிரயோசனுமும் இல்ல நான்தான் நாலு எடத்துல வேலபார்த்து கதய ஓட்டுதேன். நானும் நாளு மாசமா ஒரு கொலுசு வாங்கி குடுத்திரனும்னு நெனச்சிட்டுதானிருக்கேன்! முயடியல! ஓவ்வொரு செலவா வந்திருது.  சித்திர மாசம் கோயில் கொட.  அதுக்கு ஒரு பாடு செலவு.  வைகாசியில அண்ண மகா உக்காந்துட்டா! அதுக்கு சீரு செனத்தியின்னு ஏகமா ஆச்சுää போன மாசம் புருசனுக்கு உடம்பு சரியில்லாம போச்சுää அது குடியால வந்த கொழுத்துப் போன செலவு. ஓவ்வொண்ணுக்கும் சிட்ட வாங்கித்தான் சமாளிக்கேன். மேலத்தெரு பாலு அண்ணாச்சிதான் தருவாரு. இரண்டாயிரத்துக்கு நானூறு புடிச்சிக்கிட்டு ஆயிரத்து அருநூறு வாங்கினா நூறு நாள் இருபது ரூபாய் கட்டணும்.  இப்பவே மூணு சிட்ட ஓடுது.  இந்த நெலமயில கொலுசு வாங்க பணத்துக்கு எங்க போவேன் வேற வழயில்லாமத்தான் முத்தையா அண்ணாச்சி சொன்ன யோசனய கேட்டேன்.  தனக்குள் புலம்பியபடியே சோறு வடித்து இறக்கினாள்.  அரசு அறிவித்த இலவச பொருட்களான மிக்ஸியும்ää பேனும் சென்ற வாரம் தான் அந்த தெருவில் விநியோகிக்கப்பட்டது.  பேச்சியம்மாளுக்கும் கிடைத்தது.  அதை பயன்படுத்தாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருந்தாள்.  நான்கு நாள் முன்பு சாத்தான்குளத்திலிருந்து அவளுடைய பெரியப்பா மகன் முத்தையா அவள் வீட்டிற்கு வந்த போது.

“மிக்ஸியும் ஃபேனும் சும்மாவா கெடக்கு வேணும்னா வெலக்கி குருத்துருவமா?” என்று கேட்டார்.  

“ஏன் அண்ணாச்சி அரசாங்கம் இலவலசமாக குடத்த இதயுமா வெலக்கி விக்காக?

“என்னம்மா நீ  பேசுத?

“போன தடவ இலவச டி.வி பட்டபாடு ஓனக்கு தெரியாதாங்கும்! அதே நெலமதான் இதுக்கும்! யோசிச்சு சொல்லு! ரெண்டும் சேத்து ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு போவும்.  நானே வித்து தாரேன்”      

பேச்சியம்மாளும் யோசித்து பார்த்தாள் ஏற்கனவே ஃபேன் வீட்டில் இருக்கிறது.  மிக்ஸிய ப்ளக்கில் மாட்டி அரைப்பதற்குள்ää அம்மியில் வைத்து ரெண்டு இழுப்பு இழுத்து விடலாம்.  இந்த ஆயிரத்து ஐநூறு கிடைத்தால் மகளுக்கு கொலுசு வாங்கி கொடுத்து விடலாம்.

“சரி அண்ணாச்சி நீங்களே வித்துக்குடுங்க” என்றாள். உடனே இரண்டு பொருட்களையும் எடுத்துக் கொண்டு சனிக்கிழமை பணத்துடன் வருவதாக சென்றான் முத்தையா.

மாலை வேளை முத்தையா பணத்தை கொண்டு தந்தார்.  அதை வாங்கி வைத்த பின்புதான் அப்பாடா கொலுசு பிரச்சினை தீர்ந்தது என்று நிம்மதி அடைந்தாள்.

மறுநாள் காலை விறுவிறுவென்று வேலைகளை முடித்தாள்.  பத்தரை மணி ஏரல் செல்லும் பஸ்சை பிடித்தால் கொலுசு வாங்கிவிட்டு மதியம் திரும்பிவிடலாம் என்று வேகமாகக் கிளம்பினாள்.
பணத்தை எடுக்க பணம் வைத்திருந்த டப்பாவிற்குள் கைவிட்டபோது பகீரென்றது.  டப்பா வெறுமையாயிருந்து.

“அடப்பாவி மனுசா புள்ளாக்கி கொலுசு வாங்க வெச்சிருந்த பணத்தையா எடுத்த? ஆத்திரம் பொங்கியது.  துக்கம் தொண்டையை அடைத்தது.  நேற்று இரவு கோபால் முழுபோதையுடன் வந்துபோது கூட சந்தேப்படவில்லை. மிகஸியையும் ஃபேனையும் விற்று கொலுசு வாங்க பணம் வைத்திருப்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும் மகள் விசயத்தில் விளையாட மாட்டான் என்று நினைத்தாள்.  மகள் ஆசையோடு இருப்பாளே! அவளிடம் என்ன பதில் சொல்வது கொலுசு கிடைக்காது என்று தெரிந்தால் தாங்கமாட்டாளே.  

மனதில் துயரம் பொங்க அழுது அரற்றினாள்.

சிறிது நேரத்தில் போதையுடன் வீட்டிற்கு வந்தான் கோபால்

ஆவேசத்துடன் பாய்ந்து சட்டையை பிடித்து உலுக்கினாள்.

“நீயெல்லாம் ஒரு மனுசனா?” “பெத்த புள்ளக்கி ஒரு கொலுசு வாங்கித்தர வக்கில்ல. நான் கஷ்டப்பட்டு கொஞ்சம் பணம் ரெடி பண்ணி வெச்சிருக்கேன். அத எடுத்துட்டு போயி குடிச்சிட்டு வந்திருக்கியே நீயெல்லாம் வெளங்குவியா?”

“ஏ செத்த மூதி கைய எடுடி”

மனைவியின் கையை உதறினான்.

“ஏன் இந்த நெல நிக்க? என்னமோ கஷ்டப்பட்டு ஒழச்சு சேத்து வச்சிருந்த பணத்த எடுத்த மாதிரி இந்த குதி குதிக்க? இந்த பணம் எப்படி வந்தது சொல்லுடி”

“இலவச மிக்ஸிää ஃபேன் வித்து வாங்கி வெச்சிருக்கேன்”

“அப்படிச் சொல்லு! இலவச மிகஸியும்ää ஃபேனும் அரசாங்கம் குடுக்குதே! அதுக்கு பணம் எப்படி வருது? நோட்டு அச்சடிச்சா?”

“பொறவு?”

“அடிப்போடி கூறுகெட்டவளே.  நாங்க எல்லாம் கஷ்டப்பட்டு குடிக்கிறதால வர்ற வருமானத்த வெச்சு தாண்டிää அரசாங்கம் இலவசங்கள தருது.  கடல்லேருந்து ஆவியாவற தண்ணி மேகமா மாறி நெலத்துல பெய்யுது.  அது ஆறா ஓடி வருது.  அரசாங்கம் கடல் மாதிரி நாங்கல்லாம் ஆறு மாதிரி.  அந்த கடலுக்கே தண்ணியை குடுக்கறதே நாங்க தான்! இது புரியாம கத்தறே போவியா?        

தத்துவத்தை உதிர்ந்துவிட்டு கட்டிலில் சாய்ந்தான் கோபால்.

அடுத்த வீட்டில் தன் தோழியிடம் தான் மனப்பாடம் செய்த கட்டுரைய ஒப்பித்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள் தங்கம்.

ஆழி மழைக்கண்ணா ஒன்றும் நீ கைகரவேல்………..




Tuesday, May 28, 2013

டோமியோ


கி.மு. 3,000 டைகிரிஸ் நதி, ‘மெசபட்’ என்று அழைக்கப்படும் அந்த பகுதியை தனது  வளமான வண்டலால் செழிப்பாக்கிக் கொண்டு சலசலத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. நாரைகளும், கொக்குகளும் மீன் வேட்டையாடிபடி பொழுது போக்கிக் கொண்டிருந்தன.

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.