Wednesday, March 5, 2014

தமிழாய் மாறிய ஆங்கிலம்

                      ஒரு மூலமொழியிலிருந்து கிளைத்து எழுவது பல மொழிகள் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பிட்ட ஒரு மொழி பேசும் இனமக்களின் ஒரு பிரிவினர் .வெவ்வேறு பகுதிகளில் குடியேறும் பொழுது அந்தந்த கால, இட, சூழ்நிலைக்கேற்ப அவர்களின் மொழி திரிந்தும், வேற்று மொழிக்கலப்பினாலும் புதிய மொழி உருவாகும்.

                ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டால் பல்வேறு மொழிகளிலும் உள்ளச் சொற்களையும் தமதாக்கிக் கொண்டது.தமிழிலிருந்தும் பல சொற்கள் ஆங்கிலத்துக்குச் சென்றுள்ளது. உதாரணம் அரிசி ரைஸ் இஞ்சி சிஞ்சர்.

                அதே போல் தமிழ்ச்சொற்களாய் மாறிவிட்ட பல ஆங்கிலச் சொற்கள் உண்டு.சென்னையில் உள்ள பார்பர்ஸ் பிரிட்ஜ் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஹாமில்டன் என்ற ஆங்கிலேயேர் கட்டிய பாலம் பேச்சு வழக்கில் அம்பட்டன் பாலம் என்று திரிந்து மீண்டும் அதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தபோது பார்பர்ஸ்பிரிட்ஜ் ஆனது.

                அதே போல் சென்னையில் ஆங்கிலேயர் கடற்படையை ஏமாற்றி திடீர் தாக்குதல் நடத்திய எம்டன் என்ற நீர்மூழ்கி கப்பல் நடத்தியது. அதிலிருந்து மிக சாமர்த்தியமாக ஏமாற்றுவர்களுக்கு எம்டன் என்ற பெயர் தமிழ்நாட்டில் உருவாகியது.
               
                வில்லன் என்பது ஆங்கிலச் சொல். அதிலிருந்து உருவான வில்லங்கம் என்ற சொல் பத்திரபதிவுத்துறையில் பிரபலம். இங்கு அநேக  சொத்துக்கள் வில்லங்கத்தில் மாட்டித் தவிப்பது வேறு கதை.

                கிறிஸ்தவ நெறியில் ஆங்கிலச் சொற்களை பெயராக வைத்துக் கொள்வது அனைவரும் அறிவோம்.ஆனால் தென் மாவட்டங்களில் இரண்டு ஆங்கிலச் சொற்கள் இந்துக்களின் பெயர்ச் சொற்களாக மாறி விட்டதை அறிவீர்களாஅதுவும் அவை இரண்டும் இரண்டு தெய்வங்களை குறிக்கும் பெயர்ச் சொற்கள் ஆகும்.

பிரசித்தி பெற்ற காவல்தெய்வமான சுடலைமாடன் தனது பக்தருக்காக ஒரு வழக்கில் உயர்நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொன்னதாக ஒரு கதை உண்டு. ஹைகோர்டில் வந்து சாட்சி சொன்னதால் அவரின் மற்றொரு பெயரான மகாராஜனுடன் சேர்த்து ஐகோட்மகாராஜன் என்று அழைப்பதுண்டு. அவரின் பக்தர்கள் ஐகோட் மகாராஜன் என்று தமது குழந்தைகளுக்கு பெயர் வைத்து ஐகோட்டு என்று அழைப்பது வழக்கம்.

                அந்த பெயருள்ளவர்கள் தனது பெயரை HIGHCOURT என்று எழுதுவதில்லை.ICOT என்றோ IKOT என்றோதான் எழுதுகிறார்கள்.
               
                அதே போல் தமிரபரணி ற்றங்கரையில் ஏரல் சேர்மன் அருணாச்சலசாமி கோயில் உள்ளது.சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அருணாச்சலம் என்பவர் நல்லொழுக்கமுள்ளவராக திகழ்ந்தவர். அவரது ஊரில் சேர்மனாக பதவி வகித்தவர் சிறு வயிதிலேயே இறந்துபோன இவர் பல அற்புதங்களை நிகழ்த்தினாராம். அவருக்குப்பின்னர் கோயில் எழுப்பப்பட்டு அக்கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. அவரது பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சேர்மன் என்று பெயர் வைப்பது வாடிக்கையானது. அவர்கள் தங்கள் பெயரை ஆங்கிலத்தில் CHAIRMAN  என்று எழுவதில்லை. SERMAN என்று தான் எழுதுகிறார்கள்..        

                இன்னும் பல சொற்கள் இருக்கலாம் அறிந்தவர்கள் பதிவிடலாம்.

                 


 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.